Saindhavi Prakash: ‘எல்லா நேரமும் அப்படியே இருக்க முடியாது.. நானும் மனுஷிதானே.. எனக்கும் வலிக்கும்..’ - சைந்தவி பேட்டி
Saindhavi Prakash: நான் எல்லா சூழ்நிலைகளையும், இப்படித்தான் கையாளுவேன் என்று சொல்ல வில்லை. நானும் மனுஷிதான். நானும் காயப்படுவேன். எனக்குத் தெரியும், அவர்களது எண்ணம், என்னை காயப்படுத்த வேண்டும் என்பது கிடையாது என்று. - சைந்தவி பேட்டி
![Saindhavi Prakash: ‘எல்லா நேரமும் அப்படியே இருக்க முடியாது.. நானும் மனுஷிதானே.. எனக்கும் வலிக்கும்..’ - சைந்தவி பேட்டி Saindhavi Prakash: ‘எல்லா நேரமும் அப்படியே இருக்க முடியாது.. நானும் மனுஷிதானே.. எனக்கும் வலிக்கும்..’ - சைந்தவி பேட்டி](https://images.hindustantimes.com/tamil/img/2024/05/14/550x309/1_1715684049054_1715684056387.png)
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷூம், பாடகி சைந்தவியும் பிரிந்து விட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக சைந்தவி, கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில், நமக்கு நெருக்கமானவர்கள், நம்மை காயப்படுத்தும் போது, அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலாம்.
சைந்தவி பேட்டி
இது குறித்து அவர் பேசும் போது, “ நம்மை பற்றி யாரோ, எதையோ சொல்கிறார் என்றால், நாம் அதைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ள தேவையில்லை. ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் ஏதாவது சொல்லும் போது, இவர்கள் இப்படி பேசி விட்டார்களே என்று நாம் வருந்துவோம்.
இந்த இரண்டு விஷயத்திலும், சூழ்நிலை ஒன்றுதான் என்றாலும், அதில் நாம் காயப்படும் தன்மை, நமக்கு நாமே எடுத்துக்கொள்வதுதான். ஆனால் அந்த இடத்தில் நீங்கள் அந்த விஷயத்தை தள்ளி விட்டு விட்டு, சந்தோஷமாகவும் இருக்க முடியும் அல்லது அதில் காயப்படவும் முடியும்.
உங்கள் சந்தோஷம், உங்கள் கைகளில்
அதற்காக நான் எல்லா சூழ்நிலைகளையும், இப்படித்தான் கையாளுவேன் என்று சொல்ல வில்லை. நானும் மனுஷிதான். நானும் காயப்படுவேன். எனக்குத் தெரியும், அவர்களது எண்ணம், என்னை காயப்படுத்த வேண்டும் என்பது கிடையாது என்று. அது உங்களுக்கு புரிந்து விட்டால் நீங்கள் பதில் கொடுக்கத்தேவையில்லை. உங்களது சந்தோஷம் உங்கள் கையில் இருக்கிறது. அதனை வேறு ஒருவரின் கையில் கொடுக்காதீர்கள்.” என்று பேசினார்.
முன்னதாக, சைந்தவி வெளியிட்ட அறிக்கையில், “ ஒருவருக்கொருவர் மேல் இருக்கும் பரஸ்பர மரியாதையை பேணுவதின் வாயிலாக, எங்களின் மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக, நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமணவாழ்க்கையை முடித்துக்கொண்டு, அவரவர் பாதைகளில் செல்ல முடிவெடுத்து இருக்கிறோம்.
எங்களது இந்த தனிப்பட்ட மாற்றத்தை ஊடகங்கள், ரசிகர்கள், நண்பர்கள் புரிந்துகொண்டு, எங்களது தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பள்ளி நாட்களில் இருந்தே காதலித்து வந்த இவர்கள், கடந்த 2013ம் ஆண்டு, ஜூன் 27 அன்று சென்னையில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கடந்த 2020ம் ஆண்டு தங்களின் பெண் குழந்தையை வரவேற்றனர்.
ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி இடையே கருத்து வேறுபாடு?
இந்நிலையில்தான், இருவரும் விவாகரத்து பெற போவதாக, சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தது. அதில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும், குறிப்பிடப்பட்டு இருந்தது. பலருக்கும் அதிர்ச்சியளித்த இந்த தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது.
இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றி வரும் ஜிவி பிரகாஷ், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிகராக நடித்து வந்தாலும், இசையிலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார்.
செட்டிநாடு பள்ளியில் படிப்பு
முன்பு ஒரு முறை பேட்டியில், ஜி .வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தங்கள் காதல் கதை பற்றி பேசுகையில், “ நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அவரை பார்த்தேன். அப்போது நாங்கள் இருவரும் சென்னையில் உள்ள செட்டிநாடு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம்.
சிறுவயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்ட இவர், பள்ளியில் மியூசிக் பேண்ட் ஒன்றை நடத்தி வந்தார். பள்ளியில் நல்ல பாடகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தால், அவர்களை இசைக்குழுவில் சேர்த்துக் கொள்வார்” என்று சைந்தவி பேச, தொடர்ந்து பேசிய ஜிவி, “ஒருமுறை சைந்தவி பாடுவதைக் கேட்டேன்.
அவளுடைய பாடலைக் கேட்டு, நான் என்னை மறந்துவிட்டேன். அவள் அழகும் கூட.. பள்ளியில் எந்த போட்டியிலும், எங்கள் அணி வெற்றி பெறும். அவள் பாடிக்கொண்டிருந்தால், நான் என்னையே மறந்துவிடுவேன். அவளது பாடல் மட்டுமல்ல, அவளது வார்த்தைகளும் என் இதயத்தை இனிமையாகத் தொட்டன. நாங்கள் போனில் அழைப்பது வழக்கம். அப்போது சைந்தவிக்கும் என்னை பிடிக்கும் என்று உறுதியாக நம்பினேன்.” என்றார்.
பள்ளி காதல் மீது நம்பிக்கை இல்லையா?
மேலும் பேசிய அவர் “பெரும்பாலான மக்கள் பள்ளி காதல் மீது நம்பிக்கை இல்லை என சொல்கிறார்கள். ஆனால் நான் நம்புகிறேன். எங்களுடைய காதல் உண்மையான காதல். அதனால் தான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே சொல்ல நினைத்தேன்.
ஆனால், அவள் எனக்கு அந்த வாய்ப்பை தரவில்லை. ஒரு நாள் நாங்கள் சந்தித்தபோது, அவள் என்னை விரும்புகிறாள் என்று சொன்னாள். ஆச்சரியம்...! நான் ப்ரோபோஸ் செய்ய நினைத்தால், அவள் எதிர்பாராத விதமாக என்னிடம் சொன்னாள். யோசித்து விட்டு கிளம்பினேன். இரண்டாவதாக என் காதலை சொன்னேன்” என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்