Saif Ali Khan Stabbed: ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்.. 2.5 இன்ச் ஆழம் நுழைந்த கத்தி - போலீசார் வெளியிட்ட சிசிடிவி காட்சி
Saif Ali Khan Stabbed: ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதில் சைஃப் அலிகான் முதுகு தண்டுவாடம் அருகே 2.5 இன்ச் வரை இறங்கியுள்ளது. கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபரில் விடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது அவர் ஆபத்தில் இருந்து மீண்டு நலமுடன் இருப்பதாகவும், நடிகரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
இந்த சம்பவம் தொடர்பாக சைஃப் அலிகான் உதவியாளர் காவல் துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் தரப்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது, "12வது மாரியில் இருக்கும் சைஃப் அலி கானின் வீட்டில் ஒரு பணிப்பெண் குளியலறையின் அருகே ஒரு நிழல் போவதை கண்டுள்ளார். ஆரம்பத்தில் அது கரீனா கபூர் என நினைத்த அவர், பின்பு அருகில் சென்று பார்த்த போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபராக இருந்துள்ளார்.
பணிப்பெண்ணை பார்த்ததும், அவரை தாக்கி கூர்மையான ஆயுதத்தை காட்டி அமைதியாக இருக்குமாறு மிரட்டியுள்ளார். அப்போது அருகில் இருந்த இரண்டாவது வீட்டுப் பணிப்பெண் அங்கு வந்த போது, அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க உடனே அந்த மர்ம நபர் ரூ.1 கோடி என்று கூறியுள்ளார்.
ஆட்டோ ரிக்ஷாவில் மருத்துவமனை சென்ற சைஃப் அலிகான்
இந்த சத்தத்தை கேட்ட சைஃப் அலி கான் தனது அறையிலிருந்து இறங்கி அங்கே சென்றுள்ளார். அப்போது அந்த நபருக்கும், நடிகருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாகி, சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டார். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது ட்ரைவர் இல்லாததால் 8வது மாடியில் வசித்திருந்த நடிகரின் குடும்பத்தினரை அழைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆட்டோமெட்டிக் கார் ஓட்டதெரியாததால், ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் சைஃப் அலி கான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சைஃப் முதுகு தண்டுவாடம் அருகே 2.5 இன்ச் அளவு கத்தி இறங்கிய நிலையில், அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. கழுத்த, கை பகுதிகளிலும் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் முகத்தை மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர். சைஃப் வசித்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் சிசிடிவி காட்சியில் பதிவான விடியோவில் தாக்குதல் ஏற்படுத்திய நபர் படியில் இருந்து கீழே இறங்கி செல்லும் காட்சி தெளிவாக தெரிகிறது.
சைஃப் மீதான இந்த கொலை வெறி தாக்குதலை தொடர்ந்து மும்பை பிரபலங்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கான் நடிகர்களுக்கு கொலை மிரட்டல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் நடிகருக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது உயிருடன் இருக்க வேண்டுமானால் ரூ. 5 கோடி செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.
மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ்அப் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், "அவர் எங்கள் கோயிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் கொன்று விடுவோம். எங்கள் கும்பல் இன்னும் செயல்பாட்டில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் இந்த செய்தியை அனுப்பியதாக கூறப்பட்டது. இதன் பின்னர் அடுத்த ஒரு வாரத்தில் சல்மான் கானுக்கு வரும் இரண்டாவது கொலை மிரட்டலாக இது அமைந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி, ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஒருவரை, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பேரில் சல்மானை கானை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ரூ. 50 லட்சம் கேட்டு, பணத்தை தராவிட்டால் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் ஷாருக்கானை கொலை செய்துவிடுவதாக போலீசாருக்கு அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் வைத்தே அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்