Vanangaan Issue: சூர்யா வெளியேற இது தான் காரணம்… அதர்வா உள்ளே வர வாய்ப்பு!
அதோடு, படப்பிடிப்பு தளத்தில், நடந்த ஒரு முக்கியமான கசப்பான சம்பவம் தான், இருவரும் பிரிய காரணம் என்கிறார்கள்.
வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதும், அதற்கு இயக்குனர் பாலா ஒரு அறிக்கை விட்டதும், அதை ஏற்பதாக தயாரிப்பு நிறுவனம் மூலம் சூர்யா ரீட்விட் செய்ததும் எல்லாம் ஓகே, உண்மையில் என்ன தான் பிரச்னை வணங்கான் படப்பிடிப்பில்?
ட்ரெண்டிங் செய்திகள்
நிறைய இருக்கு என்கிறார்கள், விபரம் தெரிந்தவர்கள். சூர்யா அறிமுக காலத்தில் பல படங்களில் நடித்தாலும், அவர் நடிப்பால் அறியப்படவில்லை. பல படங்களில், அவருக்கு ஆரம்ப கால சினிமாவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.
அந்த சமயத்தில் தான் நந்தா படத்தில் சூர்யாவை கொண்டு வந்தார் பாலா. சூர்யாவிற்குள் ஒரு நடிகன் இருப்பதை கண்டறிந்தது, நந்தா படத்தின் மூலம் பாலா. அதன் பிறகு சூர்யாவின் கிராப், உயர ஆரம்பித்தது.
பாலாவின் அறிமுகத்தை சூர்யா கொண்டாடினார். குடும்ப அளவில் உறவாடினார். இருவரும் பரஸ்பரம் நன்கு நெருக்கமாகினர். பாலா முதன் முதலில் ‘பி ஸ்டூடியோஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய போது, மாயாவி என்கிற படம் தான் முதலில் எடுக்கப்பட்டது. அதில் ஹீரோ சூர்யா தான்.
அந்த அளவிற்கு, பாலா-சூர்யாவிற்கு நல்ல உறவு இருந்தது. இதற்கிடையில் பாலாவிற்கு கடைசியாக பல படங்கள் ப்ளாப். உண்மையை சொல்ல வேண்டுமானால், அவருக்கு இறங்கு முகமாக இருந்தது.
அந்த சமயத்தில் தான், பாலாவுக்கு ஒரு ப்ரேக் தர வேண்டும் என்கிற நோக்கில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி மூலம், தானே நடித்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தை தொடங்க நினைத்தார் சூர்யா.
தொடக்கம் நன்றாக தான் இருந்தது. வணங்கான் படத்தில் கதை, திட்டமிடல் எல்லாவற்றிலும் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. உண்மையில் வணங்கான் கதையை முழுமையாக ஆரம்பத்தில் பாலாவிடம் சூர்யா கேட்கவில்லை என்கிறார்கள்.
ஆனால், பாலாவிடம் இருந்து சூர்யாவிற்கு திருப்தியான திரைக்கதை வரும் என்கிற எதிர்பார்ப்பு அவரிடத்தில் இருந்தது. அதாவது சொன்ன கதையின் விபரிப்பு, முழுமை அடையாமல் இருந்துள்ளது. அதோடு, படப்பிடிப்பு தளத்தில், நடந்த ஒரு முக்கியமான கசப்பான சம்பவம் தான், இருவரும் பிரிய காரணம் என்கிறார்கள்.
கன்னியாகுமரியில் கதாநாயகியை சூர்யா விரட்டிச் செல்லும் காட்சி ஒன்றை, அரை நாள் முழுவதும் பாலா எடுத்ததாக கூறப்படுகிறது. ஓடி ஓடி சூர்யாவிற்கு அதில் சிரமம் வந்துள்ளது.
மறுநாளும் இதுவே தொடர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த யூனிட்டும் அதை பார்க்க, சூர்யாவிற்கு அதுவே அவமானமாகியிருக்கிறது. ஒரு கட்டத்தில் கடுப்பான சூர்யா, இணை இயக்குனர் ஒருவரை அழைத்து, அவரிடம் தன் விரக்தியை தெரிவித்துவிட்டு அங்கிருந்தே காரில் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது சூர்யாவிற்கு தெரிந்து விட்டது, இது ஒத்துவராது என்று. அதனால் தான் வணங்கான் திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே, சிவா உடன் புராண கதைக்கான படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் சூர்யா.
இதற்கிடையிலும் இருவரையும் சமரசம் செய்து வைத்தவர் சிவக்குமார். மீண்டும் படத்தை தொடங்கலாம் என முடிவு செய்த போது, கதையை மாற்ற வேண்டும் என்பதில் சூர்யா உறுதியாக இருந்தார்.
இதற்காக மாற்று கதையை உருவாக்க பாலா உள்ளிட்ட குழுவினர் மீண்டும் முயற்சி எடுத்தனர். அதில் எதிலிலும் சூர்யாவுக்கு திருப்தி இல்லை. இனி சூர்யாவை படத்திற்குள் கொண்டு வர வாய்ப்பில்லை; அவரும் வரப்போவதில்லை என்பதை உறுதி செய்த பிறகு தான், பாலா இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
சூர்யா விலகினாலும், வணங்கான் படம் தொடரும் என அறிக்கையில் பாலா குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் சூர்யாவிற்கு பதில் அதர்வாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதர்வா முரளியை வைத்து, பரதேசி என்கிற படத்தை இயக்கியவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்