38 Years of Mr. Bharat: “என்னம்மா கண்ணு செளக்கியமா?” நடிப்பில் அதகளம் செய்த ரஜினிகாந்த் - சத்யராஜ்
ரீமேக்காக இருந்தாலும் மிஸ்டர்.பாரத் படத்தில் ரஜினி, சத்யராஜ் போட்டு போட்டு நடிப்பு திறமையை வெளிகாட்டியிருப்பார்கள். இதன் காரணமாக படம் வெளியான ஆண்டில் சிறந்த மசாலா திரைப்படங்களில் ஒன்றாக இது அமைந்தது.

சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக்கில் நடித்து தமிழிலும் அந்த கதையாக சூப்பர் ஹிட் ஆக்கியவர் ரஜினிகாந்த். அந்த வகையில் அமிதாப் நடிப்பில் 1978இல் வெளியான த்ரிசூல் என்ற படத்தின் ரீமேக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிஸ்டர். பாரத் வெளியானது.
ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் சத்யராஜ், அம்பிகா, ஷ்ரத்தா, எஸ்வி சேகர், ரகுவரன், கவுண்டமணி, விசு உள்பட பலரும் நடித்திருப்பார்கள். ரஜினியை விட வயது குறைவான சத்யராஜ் இந்த படத்தில் அவரது அப்பவாக நடித்திருப்பார்.
சத்யராஜ் ஏமாற்றப்படும் ரஜினியின் தாயாக ஷரத்தா இறப்புக்கு நீதி வேண்டியும், சத்யராஜ்தான் தனது தந்தை என நிருபிக்க ரஜினி போராடுவதும் தான் படத்தின் ஒன்லைன். படம் முழுவதுமே பெரும்பாலான காட்சிகள் ரஜினி - சத்யராஜ் இடையிலான ஃபேஸ் ஆஃப் ஆகவே இருந்து வரும். இருவரும் மாறி மாறி சீண்டிக்கொள்வது, யார் பெரியவர், புத்திசாலி என்கிற ஈகோவை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் திரைக்கதையில் ரஜினி, சத்யராஜ் என இருவரும் அதகளம் செய்திருப்பார்கள்.