'நான் லவ் பண்ணுன பொண்ணுக்கு இருந்த பெஸ்டி.. கால் செய்தால் என்கேஜிடாகவே இருக்கும்’: பிரதீப் ரங்கநாதன் பேட்டி
பிரதீப் ரங்கநாதன் பேட்டி: டிராகன் படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன் மற்றும் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்ய கதைகளைப் பகிர்ந்து இருக்கின்றனர்.

பிரதீப் ரங்கநாதன் பேட்டி: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்த்திரைப்படம், டிராகன். கல்லூரியில் நடந்த மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இப்படம் தொடர்பான புரொமோஷனுக்காக, டிராகனில் நடித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகை கயாடு லோஹர் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அனைவரும் கூட்டாக பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு:
‘’எப்படி காலேஜில் இருந்தீங்க:
அஸ்வத் மாரிமுத்து: நாங்க படிச்ச காலேஜ் சும்மா காலேஜ் எல்லாம் இல்லை. 96% விழுக்காடுக்கு மேல் எடுத்தால் தான் காலேஜில் சீட். 12ஆவது படிக்கும்போது நான் 1200க்கு 1141 மார்க் எடுத்தபையன். பிரதீப்பும் 1200க்கு 1163 மார்க் எடுத்தவன். அந்த காலேஜில் மெரிட் ஸ்டூடண்ட் தான் படிப்பாங்க. என்னுடைய மெடிக்கல் கட் ஆஃப் 200க்கு 198. எனக்கு மெடிக்கல் சீட் கிடைத்து வேண்டாம் ஜாலியாக இருக்கலாம்ன்னு நினைச்சு, இன்ஜினியரிங் எடுத்தேன்.
அரியர் எல்லாம் வைச்சீங்களா?
அஸ்வத் மாரிமுத்து: நான் கிளியர் பண்ணிட்டேங்க.
பிரதீப் ரங்கநாதன்: நான் பிளேஸ் ஆகி ஒன்றரை வருஷம் ஐ.டியில் வேலைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.
அஸ்வத் மாரிமுத்து: நான் யாரையும் லவ் பண்ணலைங்க. காலேஜில் ஜாலியாக இருக்கலாம்ன்னு தான் இன்ஜினியரிங் போனேன். எனக்கு கோடிங் சுத்தமாக வரவே இல்லை. கோடிங்கை மனப்பாடம் செய்து பரீட்சை எழுதுவேன்.
ரிலேஷன்ஷிப்பில் வாங்கிய பெரிய பல்பு?
கயாடு லோஹர்: நான் என் கிரஷ்கூட ஸ்கூலில் டேட்டிங் பண்ணிட்டு இருந்தேன். அப்போது அந்தப் பையன் நாம் இரண்டுபேரும் சேர்ந்து சுத்திறதை வெளியில் சொல்லவேண்டும் என்று சொன்னான். அடுத்து நண்பர்கள் எல்லாரும்பேசிட்டு இருக்கும்போது நான் டேட் பண்ணிய பையன், இன்னொரு பொண்ணுகூட டேட் செய்துட்டு இருக்கிறதாக சொன்னாங்க. அது எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு.
பிரதீப் ரங்கநாதன்: நான் ஸ்கூலில் லவ் பண்ணும்போது லேண்ட் லைனில் தான் கால் பண்ணுவேன். அவங்ககிட்ட மொபைல் போன் இருக்கும். மொபைலில் இருந்து லேண்ட் லைனுக்கு கால் செய்தால் எங்க வீட்டில் யாராவது எடுப்பாங்க இல்லையா. அதனால் நான் கால் பண்ணும்போது மட்டும் தான் அவங்க பேசமுடியும். 12ஆவது முடியிற சமயத்தில் நான் கால் பண்ணுனேன் ரொம்ப நேரமாக என்கேஜிடாகவே இருந்துச்சு. அடுத்து ஒரு ஒரு மணிநேரம் கழிச்சு அடிக்கும்போதும் என்கேஜிடாகவே இருந்துச்சு. அடுத்து கொஞ்சநேர கழிச்சு போன் அடிச்சேன். எடுத்தாங்க. எடுத்து, என் பக்கத்து வீட்டுப்பையன் கூட பேசிட்டு இருக்கேன்னு சொன்னாங்க. பக்கத்துவீட்டில் பையன் இருக்கானா அப்படின்னு கேட்டேன். உடனே,ஆமா ஆமான்னு சொன்னாங்க. சரி ஓகேன்னு சொல்லிட்டு வைச்சிட்டேன்.
திரும்ப இரண்டுநாள் கழிச்சு கால் பண்ணுனேன். திரும்பவும் செல்போன் என்கேஜிடாக இருந்துச்சு. சரி ஒரு அரைமணிநேரம் கழிச்சு போன் பண்ணுனேன், என்கேஜிடாக இருந்துச்சு. திரும்ப ஒரு அரைமணிநேரம் கழிச்சு அடிச்சேன் என்கேஜிடாக இருந்துச்சு. திரும்ப கால் செய்தேன், என்கேஜிடாக இருந்துச்சு. அடுத்து கால் செய்யும்போது எடுத்தாங்க. எடுத்து பக்கத்துவீட்டுப்பையன் பாட்டுபாடச்சொல்லி கேட்டான், நான் பாடிட்டு இருந்தேன்னு சொன்னாங்க. அப்போது எனக்கு ஷாக், நீ பாடுவியான்னு கேட்டேன். ஆமா நான் பாடுவேன்னு சொன்னாங்க. ரொம்ப என்கேஜிடாகவே இருக்கீயே. என்ன நடக்குது அப்படின்னு லைட்டாக பேச ஆரம்பிக்கிறேன். ரொம்ப இடிச்சிருச்சு. அதற்கப்புறம் ரொம்ப பிரச்னை எல்லாம் வந்திருச்சுங்க. திரும்ப ஒரு நாள் கால் பண்ணி நான் தானே உன் பாய் ஃபிரெண்ட்.
எனக்கு சப்போர்ட் பண்ணுவியா, இல்லை அவனுக்கு சப்போர்ட் பண்ணுவியான்னு கேட்டேன். உடனே அவங்க ரெண்டு பேரும் எனக்கு முக்கியம்ன்னு சொன்னாங்க. அப்போது என்னிக்கு நான் தான் முக்கியம்ன்னு உனக்குத் தோணுதோ, அன்னிக்கு எனக்கு கால் பண்ணு அப்படின்னு சொல்லி வைச்சிட்டேன். அதற்கப்புறம் அந்தப் பக்கம் இருந்து கால் வரல. திரும்பவும் நான் எவ்வளவோ முயற்சி பண்ணுனேன், கால் வரல. அதுதான் பல்பு’’ என்றார், நடிகர் பிரதீப் ரங்கநாதன்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்