'சிவாஜி வீடு ஜப்திக்கு எதிரான வழக்கு'.. அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது - நடிகர் பிரபு திட்டவட்டம்!
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்ட வழக்கில், எனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட நான் கடன் வாங்கியது இல்லை. எனவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பிரபு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நடிகர் பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவாஜி வீடு ஜப்தி நடவடிக்கையில் நடிகர் பிரபு உதவ மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார். அதற்கு, ராம்குமார் உங்கள் சகோதரர்தானே? ஒன்றாகத்தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அவருடைய கடனை நீங்கள் செலுத்தலாமே? இப்போது ராம்குமார் செலுத்த வேண்டிய கடனை நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே? என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் யோசனை தெரிவித்தார்.
ராம்குமாருக்கு உதவ முடியாது - நடிகர் பிரபு
ஆனால், அதை நிராகரித்த பிரபு தரப்பு, ராம்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு உதவ முடியாது. ராம்குமார் வாங்கிய 3 கோடி ரூபாய் கடனுக்காக 3 ஆம் நபரான எனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான வீட்டை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட நான் கடன் வாங்கியது இல்லை. எனவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பிரபு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ் வழக்கு விசாரணையை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.