போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி விடியோ.. உருவ பொம்பை எரிப்பு, வீட்டில் கல் வீசி தாக்குல்! அல்லு அர்ஜுன் கோரிக்கை
போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி விடியோ மூலம் அல்லு அர்ஜுன் பொய் செல்லியிருப்பது தெரியவந்துள்ளது. மாணவர் சங்கத்தினர் அல்லு அர்ஜுனுக்கு எதிராக போராட்டம் நடத்தியதோடு அவரது வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ப்ரிவியூ ஷோ பார்க்க வந்த பெண் கூட்ட நெரசலில் உயிரிழந்த விவகாரம் தெலங்கானாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சம்பவம் தற்போது தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் இடையிலான மோதாலாகவே மாறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரேவந்த் ரெட்டி மற்றும் அல்லு அர்ஜுனின் கருத்துகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் தங்கள் வாதங்களை முன் வைத்து பல விடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பொறுப்புடன் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
இந்த சூழ்நிலையில், தனது ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் பொறுப்புடன் செயல்படுமாறு நடிகர் அல்லு அர்ஜுன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அறிக்கையில், "எனது ரசிகர்கள் அனைவரும் எப்போதும் போல் தங்களது உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எந்த விதமான தவறான மொழி அல்லது நடத்தையை வெளிப்படுத்த வேண்டாம்.
போலியான ஐடிகள் மற்றும் போலி புராஃபைல்கள் மூலம் எனது ரசிகர்களை தவறாக சித்தரித்து, தவறான பதிவுகள் பகிர்வுகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரசிகர்கள் இது போன்ற பதிவுகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரியுள்ளார்.
அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுன் வீடு முன் குவிந்த உஸ்மானியா பல்கலைகழக போராட்ட குழுவினர், அவரது வீட்டில் கற்களை வீசி தாக்கியுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்த பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைக்கவும் செய்துள்ளனர்.
அப்போது, உயிரிழந்த ரேவதி குடும்பத்திடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அல்லு அர்ஜுனின் உருவ பொம்மையை தீயிட்டு கொழுத்தப்பட்டது. மாணவர்கள் சங்கத்தினரின் போராட்டத்தால் பரபரப்பு அல்லு அர்ஜுன் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
அல்லு அர்ஜுனை அழைத்து வந்த போலீஸ்
முன்னதாக, இந்த சம்பவம் குறித்து தெலங்கானா சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். "அல்லு அர்ஜுனின் செயலால் தான் திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திரையரங்குக்கு வெளியே ஒருவர் உயிரிழந்துவிட்டார். கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது என போலீசார் அல்லு அர்ஜுனிடம் போலீசர் தெரிவித்த பிறகும், அவர் கண்டுகொள்ளாமலும், புறப்படாமலும் இருந்துள்ளார்.
பின்னர் போலீசார் அவரிடம் அங்கிருந்து உடனடியாக புறப்படாவிட்டால் கைது செய்வோம் என கூறி கட்டாயபடுத்திய பின் தான் அங்கிருந்து புறப்பட்டார்" என கூறினார்.
இதற்கு அல்லு அர்ஜுன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்போது,"எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும், என்னை அவமானப்படுத்தும் முயற்சியும் நடக்கிறது. போலீஸ் உண்மையில் தன்னை சந்திக்கவில்லை" என்று கூறினார்.
இந்த சூழலில், திரையரங்கில் இருந்து அல்லு அர்ஜுன் போலீசார் அழைத்து வரும் விடியோவை தற்போது ஹைதராபாத் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் அல்லு அர்ஜுன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது பொய் என்பதை நிருபனம் ஆகியுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.