‘ரேவந்த் ரெட்டிக்கு பாராட்டு.. அல்லு அர்ஜூன் போதுமான நடவடிக்கை எடுத்திருக்கணும்.. காவல்துறையை குறை சொல்ல’- பவன் கல்யாண்!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை பாராட்டுகிறேன். குறிப்பாக புஷ்பா 2 படத்தின் போது ரேவந்த் ரெட்டி திரையுலகிற்கு முழு ஆதரவு அளித்தார். டிக்கெட் விலையை உயர்த்த அனுமதிப்பது, தொழில்துறையின் வளர்ச்சியை பெரிதும் ஊக்குவித்துள்ளது - பவன் கல்யாண்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அதில் கலந்து கொள்ள அல்லு அர்ஜூன் அங்கு வந்ததால் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த நெரிசலில், ரேவதி என்ற பெண்மணி உயிரிழந்தார். இதனையடுத்து இது தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசி இருக்கிறார்.
சினிமா என்பது ஒரு குழு முயற்சி.
குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சினிமா என்பது ஒரு குழு முயற்சி. எல்லோரும் அதன் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் மட்டுமே தன்ந்தனியாக குற்றவாளியாக்கப்பட்டுள்ளார், இது சரியல்ல என்று நான் நம்புகிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், ‘அல்லு அர்ஜுன் படம் பார்க்க சென்றபோது, படத்தை திரையிட்ட தியேட்டர் நிர்வாகம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்; இந்த விவகாரம் குறித்து ஊழியர்கள் அல்லு அர்ஜுனுக்கு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். அவர் உட்கார்ந்தவுடன், விஷயத்தை தெரிவித்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்; இது அல்லு அர்ஜுனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டத்தின் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் அவர் அதைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
காவல்துறையை குறை கூறவில்லை
இதுபோன்ற சம்பவங்களில், நான் காவல்துறையை குறை கூறவில்லை, ஏனென்றால் அவர்களின் முன்னுரிமை பாதுகாப்பு. விஜயநகரம் மாவட்டத்தில் நான் சென்ற சமீபத்திய சுற்றுப்பயணத்தின் போது கூட, காவல்துறையினர் என்னை முன்னணியில் இருக்கச் சொன்னார்கள்.
அல்லு அர்ஜுன் போதுமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். சிரஞ்சீவி (அவரது மூத்த சகோதரர்) கூட தியேட்டருக்குச் செல்வார்; ஆனால் தனியாகவும் மாறுவேடத்திலும் செல்வார். நானும் அப்படி சென்று இருக்கிறேன்’ என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘திரைப்பட நட்சத்திரங்கள் பாராட்டுக்கும் விருதுகளுக்கும் தகுதியானவர்கள், அதை புறக்கணிக்க முடியாது. தன்னைத் தேடி வந்திருக்கும் ரசிகர்களுக்கு அந்த நடிகர் உரிய மரியாதையை கொடுக்காமல் இருக்கும் போது, அவரைப்பற்றி ரசிகர்கள் வேறு மாதிரி நினைக்க வாய்ப்பு இருக்கிறது.
ரேவந்த் ரெட்டியை பாராட்டுகிறேன்.
இந்த சம்பவம் குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை பாராட்டுகிறேன். குறிப்பாக புஷ்பா 2 படத்தின் போது ரேவந்த் ரெட்டி திரையுலகிற்கு முழு ஆதரவு அளித்தார். டிக்கெட் விலையை உயர்த்த அனுமதிப்பது, தொழில்துறையின் வளர்ச்சியை பெரிதும் ஊக்குவித்துள்ளது," என்றார். அல்லு அர்ஜுன், ஒரு நிகழ்ச்சியில் தனது பெயரை உச்சரிக்க மறந்துவிட்டார் என்பதற்காக ரேவந்த் ரெட்டி அவர் மீது கைது நடவடிக்கையை மேற்கொண்டார் என்று கூறுவது தவறு. அல்லு அர்ஜூனுக்கு பதிலாக அந்த இடத்தில் ரேவந்த் ரெட்டி இருந்திருந்தால் கூட, அல்லு அர்ஜுன் போல அவரும் கைது செய்யப்பட்டிருப்பார்.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்