நடிகை சிநேகாவால் வந்த பிரச்னை.. ஸ்பாட்டில் திட்டி தீர்த்த சேரன்! தன்மானத்தால் வெளியேறினேன் - இயக்குநர் பாண்டிராஜ் ஷேரிங்
ஆட்டோகிராப் சமயத்தில் சிநேகாவால் வந்த பிரச்னை காரணமாக ஸ்பாட்டில் வைத்த இயக்குநர் சேரன் தன்னை திட்டி தீர்த்த சம்பவம் பற்றி பேட்டி ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பாண்டிராஜ். பசங்க படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் சிவகார்த்திகேயனை வைத்து மெரினா, நம்ம வீட்டு பிள்ளை, கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம், சிம்புவை வைத்து இது நம்ம ஆளு போன்ற படங்களை கொடுத்துள்ளார்.
இயக்குநர் சேரனின் உதவியாளரான இவர், அவரது ஆட்டோகிராப் படத்தில் பணியாற்றியபோது தனக்கு நடந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக டூரிங் டாக்கிஸ் சேனலுக்கு சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: "சேரன் சார் கிட்ட இருக்கும் முக்கிய விஷயம் என்னன்னா அவர் ஒரு கதையை சொல்வார். அதை ஒவ்வொரு அசிஸ்டென்டிடமும் கொடுத்து, நீ இந்த படம் செய்வதாக இருந்தால் அதை எழுதி எடுத்துட்டு வா என்பார்.
அப்படித்தான் பாண்டவர் பூமி கதையை கொடுத்தபோது சிம்புதேவன், காமெடி கதையாக மாற்றி கொடுத்தார். இதை பார்த்த நான் என்ன மாதிரியான கதை கொடுத்தால் இப்படி செஞ்சிருக்க என்றார். சிம்புதேவன் எனக்கு காமெடிதான் வரும் அப்போது சொன்னார்.
எனக்கும் சேரன் சாருக்கும் ஒத்துப்போகும்
இதேபோல் அவரிடம் உதவியாளராக இருந்த ராமகிருஷ்ணன், தாயுமானவன் என ஒவ்வொருவரும் தங்களுக்கான வெர்ஷனை தருவார்கள். நான் சேரன் சார் போல் கொஞ்சம் எமோஷனுடன் கொடுப்பேன். அவருடன் ஒத்துப்போகும் விதமாக இருக்கும்.
ஆட்டோகிராப் கதையும் இப்படித்தான் நடந்தது. இதெல்லாம் சினிமா கத்துக்கிறதுக்கு உதவியாக இருந்தது. இப்போல்லாம் படத்தின் கதையை படித்து பார்த்து நன்றாக இருக்கிறதா இல்லையா என்று மட்டும் சொல்லும் சூழல் உள்ளது. நான் கதை செல்வதை நன்றாக இருப்பதாக சொல்வார்கள், இதற்கெல்லாம் அவரிடம் கத்துக்கிட்டது தான்.
பாண்டவர் பூமி படத்தில் சேரனுடன் பணியாற்றினேன். அதன் பிறகு அவர் நடிக்க போயிட்டார். பாண்டவர் பூமி படத்தில் ஒளிப்பதிவாளராக தங்கர் பச்சான் சார் பாணியாற்றினார். அப்போது அவர் எனது திறமையை சிலாகித்து பேசினார். சொல்ல மறந்த கதையில் சேரன் சார் நடிச்சதால, தங்கர் பச்சான் அசிஸ்டென்டாக பணியாற்றினார். இந்த படத்துக்கு பின் ஆட்டோகிராப் படத்தில் சேரனுடன் வேலை செய்தேன். அப்போது சிநேகாவால் எனக்கும் அவருக்கும் பிரச்னை வந்தது.
சிநேகா ட்ரைவரால் ஏற்பட்ட பிரச்னை
பொதுவா இயக்குநர்கள் தங்களது கோபத்தை உதவி இயக்குநர்கள் மீது காண்பிப்பார்கள். பின்னர் உதவி இயக்குநர்கள் தங்களுக்கு கீழ் இருக்கும் டெக்னீஷ்யன்கள், ட்ரைவர்கள் போன்றோரிடம் அவர்களின் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். அப்படித்தான் தனது ட்ரைவரிடம் கடுமையாக நடந்துகொண்டதாக நடிகை சிநேகா, சேரனிடம் சொல்லியுள்ளார். இதை கேட்ட சேரன் சார் ஸ்பாட்டில் வைத்து என்னை உண்டு இல்லை என ஆக்கிவிட்டார்.
ஆட்டோகிராப் படம் அவரது சொந்த தயாரிப்பில் உருவானது. அந்த நேரத்தில் நாங்கள் சம்பளம், பேட்டா போன்ற விஷயங்களை எதிர்பார்க்கவே இல்லை. அன்றைய நாளில் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதில் மட்டும் ஆவலாக இருந்தோம்.
மனதை புண்படுத்திய வார்த்தைகள்
ஆனாலும் சேரன் சார் அன்றைய நாளில் 200க்கும் மேற்பட்டோர் பார்த்து கொண்டிருக்கும்போது அவர் வெளிப்படுத்திய சில வார்த்தைகள் மனதை புண்படுத்தியது. என்னதான் இருந்தாலும் தன்மானம் எல்லோருக்கும் இருக்கும். அப்படியே அங்கிருந்து வெளியே வந்தேன்.
சேரன் சாருக்கு உதவியாளராக, தம்பியாக, அவரது கஷ்ட காலத்தில் உடன் இருப்பது என எல்லாமுமாக இருந்தேன். இருவரும் பரஸ்பரம் நம்பிக்கொள்பவராக இருந்தோம். எங்கள் இருவருக்கும் இடையிலான நம்பிக்கை நடிகையால் உடைந்தது. பின் ஸ்பாட்டில் அப்படியே கண்கலங்கியவாறு ரோட்டில் நடந்து சென்றேன். கையில் காசு எதுவும் கிடையாது. நான்கு ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருந்த அவரது ஆபிஸில்தான் தங்கியிருந்தேன். உடனடியாக அங்கு வந்து பேக்கை எடுத்து புறப்பட்டேன்.
இரண்டு நாள்கள் கழித்து தங்கர் பச்சானுக்கு போன் செய்தேன். அவர் தென்றல் பட ஷுட்டிங்கில் இருந்தார். ஏற்கனவே அவர் என்னை அந்த படத்துக்கு அனுப்புமாறு கேட்டிருந்தார். ஆனால் அப்போது ஆட்டோகிராப் படத்தில் பணியாற்றியதால் செல்ல முடியவில்லை.
இப்போது நான் தேவைப்படுவேனா என்று தங்கர் பச்சானிடம் கேட்டபோது, பழனியில் ஷுட்டிங் நடப்பதாக கூற வர சொன்னார். அங்கு சென்று அவருடன் அந்த படத்தில் பணியாற்றினேன்"
இவ்வாறு பாண்டிராஜ் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்