Pa Ranjith: ‘பேட்டைக்காரன் திருந்தவே மாட்டான்’.. ஆடுகளம் படத்திற்கு பா.ரஞ்சித் எழுதிய கிளைமாக்ஸ் என்ன தெரியுமா?
பேட்டைக்காரன் ஒருவேளை சாகவில்லை என்றால், திருந்தி இருப்பான் என்றார்கள். ஆனால் நான் நிச்சயமாக அவன் திருந்திருக்க மாட்டான் என்று கூறினேன். - பா.ரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா. இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது; விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் கலந்துகொண்டனர்.
ஆசீர்வதிக்கப்பட்டவர்
அப்போது பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ‘இந்தப்படத்தின் இயக்குநர் தினகரன் என்னுடைய நண்பர் மற்றும் உதவி இயக்குநர். இவர் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று நான் நினைக்கிறேன்; காரணம் என்னவென்றால் அவருடைய படத்திற்கு வெற்றிமாறன், மிஷ்கின், அமீர், லிங்குசாமி உள்ளிட்ட சம்பவக்காரர்கள் எல்லோரும் விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் தமிழ் சினிமாவை வேறு மாதிரியாக மடை மாற்றி விட்டவர்கள்.
மூவர் படை
உங்களை எல்லாம் பற்றி பேசி தான் நாங்கள் சினிமாவிற்குள் வந்தோம். கல்லூரியில், நான், ப்ளூ ஸ்டார் படம் எடுத்த ஜெய், பாட்டல் தாதா படம் எடுத்த தினகரன் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக இருப்போம். அப்போது இங்கிருப்பவர்களின் படங்களை பற்றி நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம்.
அமீர் இயக்கிய பருத்திவீரன், லிங்குசாமி இயக்கிய ரன், மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே, வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை பற்றி நாங்கள் அவ்வளவு விவாதித்து இருக்கிறோம். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் பற்றி நிறைய விவாதம் செய்து இருக்கிறோம்.
ஆடுகளம் படத்தில் கிளைமாக்ஸில் ஏன் அவன் கத்தியை தூக்கிப்போட்டான். பேட்டைக்காரன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான் உள்ளிட்டவற்றை பற்றி அலசி ஆராந்தோம். பேட்டைக்காரன் ஒரு வேளை சாக வில்லை என்றால், கருப்பு அவனைக் கொன்று இருப்பான் என்று நான் கூறினேன். ஆனால் அவர்கள் அதனை ஒத்துக்கொள்ளவில்லை.பேட்டைக்காரன் ஒருவேளை சாகவில்லை என்றால், திருந்தி இருப்பான் என்றார்கள். ஆனால் நான் நிச்சயமாக அவன் திருந்திருக்க மாட்டான் என்று கூறினேன்.
மிஷ்கின் செய்த மேஜிக்
அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்கள் மிஷ்கின் சார் படங்களில் என்னை மிகவும் பாதித்திருந்தது. குறிப்பாக திருநங்கை வைத்து கிட்டத்தட்ட ஒரு நிமிடம் பேச வைத்து ஒரு காட்சியை எடுத்திருப்பார்.அது என்னை மிகவும் பாதித்தது. இவர்களது படங்களால் உத்வேகப்பட்டு படம் எடுக்க வேண்டும் என்று நான் வந்தேன். அதன் பின்னர்தான் இவர்கள் இருவரும் வந்தார்கள். அவர்கள் என்னுடன் உதவி இயக்குநர்களாக வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
நண்பர்களாக இருக்கிறார்களே இவர்கள் ஏற்கனவே இருக்கும் இங்குள்ள செட்டப்பை அந்த உரிமையை பயன்படுத்திக் கெடுத்து விடக்கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருந்தேன். அவர்களும் அதே போலவே நடந்து கொண்டார்கள் மற்ற உதவி இயக்குநர்கள் எப்படி என்னுடைய வெற்றிக்காகவும்,என்னுடைய படத்திற்காகவும் பாடுபட்டார்களோ அதே போல அவர்களும் பாடுபட்டார்கள்’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்