Kallakurichi liquor death: 'அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியமே காரணம் ' - பா. ரஞ்சித் காட்டம்!
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும், பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்து இருக்கிறது என பா. ரஞ்சித் குற்றம் சாட்டி உள்ளார்.
Kallakurichi liquor death: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 116 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றிரவு 16 ஆக இருந்த நிலையில், தற்போது 35 ஆக அதிகரித்துள்ளது. 70- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இதுவரை 3 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில், கோவிந்தராஜ் மனைவி விஜயாவை தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 900 லிட்டர் விஷசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ‘மெத்தனால்’ விற்பனை செய்த சின்னத்திரை என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
பா.ரஞ்சித் கண்டனம்
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரத்தில் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என இயக்குநர் பா . ரஞ்சித் குற்றம் சாட்டி உள்ளார்.
காவல் துறையின் அலட்சியப் போக்கே காரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்து இருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசுக்கு கோரிக்கை
மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இதனால் அவர்களின் குடும்பங்களும், வாழ்வாதாரமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாக கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரத்தில் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்