Pa RanjithonRajinikanth: ‘தலித் அரசியலெல்லாம் ரஜினிக்கு’; கேள்விக்கு சிரித்த ரஞ்சித்; கோபத்தில் ரசிகர்கள்- நடந்தது என்ன?
இந்த இரு படங்களை இயக்கியதின் வாயிலாக, பொருளாதார அளவில் தேர்ந்த நிலையையும், மக்கள் மத்தியில் பிரபலமாகவும் மாறினார் இயக்குநர் ரஞ்சித்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் தன்னை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்றாலும், அரசியலில் தன் குறித்த பார்வையை வெளிப்படுத்தாமலோ, அதிகாரத்தில் இருந்து தன்னை எதிர்த்தவர்களுக்கு பதிலடிகளை கொடுக்காமலோ இருந்ததில்லை. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் நீண்ட வருடங்களாக காத்துக்கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கட்சியை நிலைபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வந்தார். இதற்கிடையே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர் ஆலோசனையின் அடிப்படையில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது இந்த முடிவு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின்னர் மேடை ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், உடல்நிலை மோசமானதன் காரணமாகவும், மருத்துவரின் எச்சரிக்கை காரணமாகவுமே தான் அரசியலில் இருந்து விலகியதாக கூறினார்.
அந்த காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் நடித்த படங்களும் தோல்வியை தழுவிக்கொண்டிருந்தன. அந்த சமயத்தில்தான், தலித் அரசியலை தன் படத்தில் பேசி வந்த இயக்குநர் பா.ரஞ்சித் உடன் ரஜினிகாந்த் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், படத்தின் புரமோஷனையும் பிரமாண்டமாக செய்தார் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தாணு. படத்தின் டீசரும் அதில் ரஜினிகாந்த் பேசிய ‘கபாலிடா’ என்ற வசனமும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற போதும், பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூலை பார்த்ததாக தயாரிப்பாளர் தாணு பேசி இருந்தார். இதையடுத்து, அடுத்ததாகவும் பா.ரஞ்சித் உடன் ‘காலா’ படத்தில் இணைந்தார் ரஜினிகாந்த். கபாலியை விட கொஞ்சம் கமர்சியலாக படம் எடுக்கப்பட்டிருந்தாலும், திரைப்படம் பெரிதான வரவேற்பை பெற வில்லை.
ஆனால், இந்த இரு படங்களை இயக்கியதின் வாயிலாக, பொருளாதார அளவில் தேர்ந்த நிலையையும், மக்கள் மத்தியில் பிரபலமாகவும் மாறினார் இயக்குநர் ரஞ்சித். அதனை தொடர்ந்து தலித் அரசியல் தொடர்பான திரைப்படங்களை தயாரிப்பது, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, நூலகம் அமைத்து வாசிப்பை ஊக்கப்படுத்துவது, இசை நிகழ்ச்சி, திரைப்பட விழா உள்ளிட்ட பலவற்றை முன்னின்று செய்து வருகிறார்.
அந்த வகையில் அவரது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் வகையில் சென்னையின் பல்வேறு இடங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த விழா கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. தொடர்ந்து PK ரோசி திரைப்பட விழாவின் கடைசி நாளான கடந்த 10ம் தேதி, கலைஞர்கள் உரையாடினர். இதில் இயக்குநர் பா.ரஞ்சித்தும் கலந்து கொண்டார்.
அப்படியான விவாதம் ஒன்றில் ரஞ்சித் நடந்து கொண்ட விதம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம், அந்த விவாதத்தில் எதிர் தரப்பில் இருப்பவர் நீங்கள் உங்கள் அரசியலை ரஜினி வாயிலாகவே சொல்லி விட்டீர்கள். அவருக்கு நீங்கள் பேசும் அரசியல் புரிந்ததா? இல்லையா என்று கூட எனக்குத் தெரியவில்லை என்று சொல்ல, கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்து கைத்தட்டினார்கள்.
ரஞ்சித்தும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சிரித்தார். அவரது இந்த செயல்முறை ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன், எக்ஸ் தளத்தில் நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ்டேக்கையும் ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்