SarpattaParambarai 2:உருவாகிறது சார்பட்டாபரம்பரை 2..ஓடிடியா தியேட்டரா?
சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது

பா.ரஞ்சித் ரஜினி கூட்டணியில் வெளியான ‘கபாலி’ ‘காலா’ உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் அனைவரும் கொண்டாடும் படமாக அந்த இரு படங்களும் அமையவில்லை. இந்த நிலையில்தான் சார்பட்டா பரம்பரை படத்தை எடுத்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.
ஆர்யா, பசுபதி, துஷாரா விஷயன், ஜான் கொக்கன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.
மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் வசனங்கள் இன்றும் மீம்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் பா.ரஞ்சித்தின் சினிமா கிராஃப் எப்படியானது என்பதையும் திரைவட்டாரம் தெரிந்துகொண்டது.
இந்த நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வரை ஆர்யா படத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஜதின் சேத்தி தயாரிக்க இருக்கிறார்.
இந்த அறிவிப்பு குறித்து பா.ரஞ்சித் கூறும் போது, “ சார்பட்டா பரம்பரை படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான, செழுமையான அனுபவம். அந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பானது அமோகமாக இருந்தது. அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி முதலில் திரையரங்கிற்கு கொண்டு வருவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன்’ என்று பேசினார்.
ஆர்யா பேசும் போது, “ சார்பட்டா பரம்பரை படம் என்னுடைய சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாகும். அந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அது சவாலானதும் கூட.. படப்பிடிப்பை தொடங்குவது வரை எங்களால் காத்திருக்க முடியவில்லை” என்று பேசியிருக்கிறார்.

டாபிக்ஸ்