Nimirndhu Nil: அநீதிக்கு எதிரான நின்றவனின் கதை ‘நிமிர்ந்து நில்’
தீப்பொறி கிளப்பும் வசனங்களும் சமூகத்தில் புரையோடி போயிருக்கும் ஊழலுக்கு எதிரான சாடல்களுமே என்றால் மிகையல்ல.

நிமிர்ந்து நில் காதலையும் காமெடியையும் ஜாலியையும் மையப்படுத்தி வரும் படங்களை விட்டு விலகி சமுக அக்கறை கொண்டு சீரியஸ் ஆக நல்ல கருத்துக்களோடு இந்த படத்தை எடுக்க முற்பட்டிருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் இதே தினத்தில் பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் இந்த திரைப்படம் வெளியானது. படத்தின் தலைப்பே கதையை நமக்கு சொல்லி விடும். நீதி, நியாயம், நேர்மை, கணிவு, கட்டுப்பாடு என்று போதிக்கும் ஆசிரமத்தில் படித்து வளர்ந்த ஜெயம் ரவி ஹீரோவாக இரட்டை வேடங்களில் அரவிந்த் சிவசாமி மற்றும் நரசிம்ம ரெட்டி என்ற கதாபாத்திரங்களில் வருகிறார்.
ஹீரோயின் அமலாபால் பூமாரியாகவும், நரசிம்ம ரெட்டியின் ஜோடியாக ராகினி திவேதியும், நண்பர் ராமச்சந்திரனாக சூரியும், பத்திரிகையாளராக கோபிநாத்தும், சீதாலட்சுமியாக கவுரிநந்தாவும், வழக்கறிஞராக சுப்புபஞ்சு நீதிபதியாக சித்ராலட்சுமணன் எம்.பி.யாக, ஞான சம்பந்தம் டாக்டர் அறிவானந்தமாக நமோநாராயணன் போக்குவரத்து ஆய்வாளராக மாரிமுத்து ஹெட்கான்ஸ்டபிளாக தம்பி ராமையா உள்ளிட்டோரோடு அனில்முரளி ஶ்ரீரஞ்சனி மூனார் ரமேஷ் படவா கோபி கோபால் தாரிகா ரித்திகா மனோகர் லதாராவ் என்று பெரிய பட்டியலை போடலாம். இவர்கள் போதாதென்று சிறப்பு கேமியோ தோற்றத்தில் சரத்குமார், சசிகுமார், சமுத்திரகனி, நானி பிரேம்ரஷீத் கானாபாலா, பார்வதி நாயர் என்று தனியாக ஒரு பட்டியல் உள்ளது.
"சம்திங்" "கலெக்சன்" "எக்ஸ்ட்ரா" என்று தவறான முறையில் பணம் சம்பாதிக்க அலையும் அதிகாரிகளை கண்டு தட்டி கேட்கும் நேர்மையான இளைஞராக ஜெயம் ரவி. உடன் இருப்போர் இதெல்லாம் சகஜம் தானே என்று சொல்லிய போதும் அந்த அநியாயங்களை அலட்சியம் ஆக கடந்து போக முடியாத நேர்மையான இளைஞராக ஜெயம் ரவி அந்த கதாபாத்திரத்துக்குள் நூறு சதவிகிதம் பொருந்துகிறார்.
நேர்மையான இளைஞனை இந்த சமூகம் எப்படி மாற்ற முயற்சிக்கிறது என்பதை படத்தின் முதல் பாதி கோபமும் கொந்தளிப்புமாக அவ்வளவு யதார்த்தமாக நகர்ந்து படு ஷார்ப்பாக கடந்து செல்லும். முதல்பாதியில் கோபம் தெறிக்கும் வசனங்களும் நாயகனின் புத்திசாலித்தனத்தை விளக்க வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் இயல்பாக நம்மையும் அறியாமல் நிமிர்ந்து விறைப்பாக உட்கார வைக்கிறது. ‘
இரண்டாவது பாதியில் சுவாரஸ்யமான கதையாக மாறுகிறது. இல்லாத கதாபாத்திரம் ஒன்றை முறைகேடாக உருவாக்கி சப்ஜெக்ட்டை கொண்டு வந்திருப்பார் இயக்குனர். ஜெயம் ரவி க்கு உதவியாக தனது நண்பர்கள் சூரி வழக்கறிஞர் பத்திரிகையாளர் கோபிநாத் என்று வைத்துக்கொண்டு சரியாக திட்டமிடுகிறார்.
கிட்டத்தட்ட பல துறைகளில் உள்ள 147 பேரை தகுந்த ஆதாரங்களோடு சமூகத்தின் முன் குற்றவாளிகளாக அம்பலப்படுத்துகிறார். பதிலுக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஹீரோவை ஒழிப்பதற்கு சதிகளை செய்கிறார்கள். இந்த போராட்டத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை இரண்டாவது பாதி மசாலா கலந்து கொண்டு போயிருப்பார் இயக்குநர்.படத்தில் நெடுகிலும் பளிச்சென்று வசனங்கள் ஊழலுக்கு எதிராக கசையடி கொடுக்கிறது. பல்வேறு இடங்களில் அனல் கக்குகிறது. அதேபோல் ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடிக்க நன்றாக மெனக்கெட்டு இருக்கிறார். கறுப்பு தங்கம் சூரியின் வளர்ச்சியில் இது முக்கியமான படம்.
அமலா பால் வழக்கம் போல் துறுதுறு என்று இருக்கும் சுட்டி பொண்ணு. சரத்குமார் இருபது நிமிடம் வந்தாலும் அட்டகாச நடிப்பு. பத்திரிகையாளராக கோபிநாத்தும் பேசும் வசனங்கள் “நச்”. தம்பி ராமையா நம்மை நெகிழ வைக்கும் உண்மை அரசு ஊழியன். முதல்பாதியில் பரபரவென்று விரட்டி விரட்டி டாப்கியரில் சென்ற நிலையில் இரண்டாவது பாதியில் கொஞ்சம் வேகம் குறைந்து விட்டது. படத்தின் முதல் பாதியில் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விட்டு இரண்டாம் பாதியில் அசர விட்டிருந்தது என்று சொல்லலாம்.
அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போதே வேறு படங்களில் வரும் இதே கதையை நினைவு படுத்துவதும் பலவீனம். ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிய ஹிட் கொடுக்க வில்லை. இத்தனை பலவீனங்களையும் மீறி நம்மை கவனிக்க வைத்த விசயம் தீப்பொறி கிளப்பும் வசனங்களும் சமூகத்தில் புரையோடி போயிருக்கும் ஊழலுக்கு எதிரான சாடல்களுமே என்றால் மிகையல்ல.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்