கொத்தாக தூக்கிய ‘பொன்னியின் செல்வன்’.. தேடி வந்த 4 தேசிய விருதுகள்.. வரிசை கட்டிய தமிழர்கள் -கெத்து காட்டிய மணிரத்னம்!
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி, சினிமா கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
70 வது தேசிய திரைப்பட விருது
கடந்த ஆண்டு புஷ்பா, கங்குபாய் ஆகிய படங்கள் தேசிய விருதுகள் பெற்றன. இந்த நிலையில், 70 ஆவது தேசிய திரைப்பட விருது கடந்த ஆக. 16 அறிவிக்கப்பட்டது. அதில், 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்த விருதுகள் இன்றைய தினம் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன்
கடந்த 2022 ஆம் ஆண்டு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் ஐஸ்வர்யாராய், விக்ரம், கார்த்தி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, சோபிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதன் படி, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிஅமைப்பு என 4 பிரிவுகளில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த விருதுகள் இன்று கலைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.