விரட்டி அடித்தவர்கள் முன் விருட்சமாய் வளர்ந்து நின்ற நடிகை.. மொழி, விருதுகளை கடந்து வென்ற வித்யா பாலன் பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவில் இருந்து ராசி இல்லாத நடிகை என விரட்டி அடித்தவர்கள் முன் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, பிலிம்ஃபேர் விருதுகளை குவித்து வெற்றி நடை போட்ட நடிகை வித்யா பாலனின் பிறந்தநாள் இன்று.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த வித்யா பாலன் மும்பையில் தான் பிறந்து வளர்ந்தார். சிறு வயது முதலே சினிமாவில் ஈர்ப்பு கொண்ட வித்யா பாலன், ஹம் பாஞ்சின் என்னும் சீரியலில் நடித்தார். ஆனால், அவரது நடிப்பு கேரியருக்கு பெற்றோர் ஆரம்பத்திலேயே தடை விதித்து விட்டனர்.
படிப்பு தான் முக்கியம் என வீட்டில் கண்டிப்பாக சொல்லப்பட்டதால் சமூகவியலில் பட்டப்படிப்பையும், மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் படித்து முடித்தார் வித்யா பாலன். இதையடுத்து பல விளம்பரங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவின் ராசி இல்லாத நடிகை பட்டம்
இந்த நிலையில் தான் இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமியின் ரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வித்யா பாலனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரை வைத்து சில நாட்கள் படமும் எடுக்கப்பட்ட நிலையில் வித்யா பாலன் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கமிட் ஆன மோகன் லாலின் சக்கரம் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. பின் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நீக்கப்பட்டார். இது தொடர் கதையாக மாறியதால், அவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.
முதல் படத்திலேயே விருது
இதனால், முடங்கி போகாத வித்யா பாலன் 2003ம் ஆண்டு பெங்காலியில் வெளியான பாலோ தேகோ என்னும் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் வித்யா பாலன் வெளிப்படுத்திய நடிப்புத் திறனை பார்த்து அவருக்கு ஆனந்த லோக் புரஸ்கர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டு பாலிவுட்டில் என்ட்ரி ஆன வித்யா பாலன் லகே ரஹோ முன்னா பாய் எனும் படத்தில் சஞ்சய் தத்துக்கு ஜோடியானார். பின்னர் மணிரத்னத்தின் குரு படத்தில் மாற்றுத் திறனாளி பெண்ணாக துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதையடுத்து பாலிவுட்டில் அவருக்கு ஏறுமுகம் தான்.
பதிலடி தந்த வித்யா பாலன்
இதையடுத்து தன்னை ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்திய மலையாள சினிமாவில் உருமி என்ற படத்தில் நடித்து பலரிடமும் வாழ்த்து பெற்றார். மேலும், 2011ஆம் ஆண்டு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தி டர்ட்டி பிக்சர்' திரைப்படத்தில் நடித்து நாடு முழுக்க ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படம் அனைத்து மொழியிலும் டப் செய்யப்பட்டு வசூல் ரீதியாகப் பட்டையைக் கிளப்பியது. இப்படத்தில் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, நடிகர் அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் தமிழ் சினிமாவே அவரை அழைத்து நடிக்க வைத்தது. இதன் மூலம் தன் மீது விழுந்த ராசி இல்லாத நடிகை எனும் கறையை நீக்கினார்.
புகைப் பழக்கம்
தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், .சிறு வயது முதலே எனக்கு சிகரெட் வாசனை மிகவும் பிடிக்கும். புகைப்பிடப்பவர்களின் அருகில் எல்லாம் சென்று அமர்ந்திருக்கிறேன். அதுமட்டும் உடலுக்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றால் நிச்சயம் நான் ஒரு சைன் ஸ்மோக்கராக இருந்திருப்பேன். எனது இந்தப் பழக்கம் தான் டர்ட்டி பிக்சர் படத்தில் நடிக்கவும் உதவியது என்றார்.
காதல் தோல்வி
என் கல்லூரி காலத்தில் நான் ஒருவரை உருகி உருகி காதலித்தேன், ஆனால் அவனோ காதலர் தினத்தன்று பழைய காதலியை தேடிச் சென்றுவிட்டான். இது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி உடன் மன வலியையும் தந்தது. அதுமட்டுமன்றி, எனக்குள் இருந்த தன்னம்பிக்கையை முற்றிலும் சிதைத்து நொறுக்கியது. அந்த காதல் தோல்வி தான் என் வாழ்க்கையை முன்னேற்றியது. இப்படி நடக்கவில்லை என்றால் எனக்குள் ஒரு உத்வேகம் பிறந்து சாதித்திருக்க மாட்டேன்.
கல்யாணம்
நான் டேட்டிங் செய்து நேரம் செலவிடுபவள் அல்ல. சிலருடன் டேட் செய்திருந்தாலும், நான் யாருடன் என் அதிக நாட்களை டேட்டிங்கிற்காக செலவு செய்தேனோ அவரையே கல்யாணம் செய்திருக்கிறேன் என்றார்.
வித்யா பாலன், கடந்த 2012ம் ஆண்டு தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டு தன் தொழில் வாழ்க்கையிலும் முன்னேறி சாதனை படைத்து வருகிறார். அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்.