A.R.Rahman: நீயே ஒளி.. தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம்.. புத்தாண்டை ஒட்டி ஆசையை சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்..
A.R.Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

A.R.Rahman: கோலிவுட், ஹாலிவுட் மட்டுமல்லாமல் ஆஸ்கார் விருதுக்கு பின் உலக அளவில் தனக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான். இவர், பல இடங்களிலும் பல மேடைகளிலும் தமிழ் மொழி மேல் அவர் கொண்ட பற்றை நிரூபித்திருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான் ஆசை
இந்நிலையில், சித்திரை 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் தான் தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இப்போது டிஜிட்டல் வடிவில் இருக்கும் இந்தப் பணி விரைவில் நனவாகும் என்றும் கூறியிருக்கிறார்.
புதுமை குன்றாத தமிழ்
அதாவது, " 'தமிழ்' உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர் பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே முற்கால தமிழ்ச் சங்கங்களின் அர்ப்பணிப்பு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
தமிழ் மொழிக்கான நினைவுச் சின்னம்
இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப் படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது.
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் நினைவுச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இந்நினைவுச்சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும்.
தமிழால் மகிழ்வோம்
இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம். இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்" எனக் குறிப்பிட்டதுடன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர் உருவாக்க நினைத்த நினைவுச் சின்னத்தின் மாதிரி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரஹ்மானின் தமிழ் பற்று
தமிழ் திரைப்படங்களில் சவுண்ட் இன்ஜினியர், இசையமைப்பாளர் என வளர்ந்து வந்த ஏ. ஆர். ரஹ்மானுடன் சேர்ந்து அவரது தமிழ் பற்றும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அவர், தமிழ் மொழி மீது கொண்ட ஈடுபாட்டால், பிற்காலத்தில் அவர் தமிழ் பாடல்களை எழுதவும் ஆரம்பித்தார்.
அத்துடன் ஆஸ்கார் மேடை ஏறிய சமயத்தில் கூட எல்லாப் புகழும் இறைவனுக்கே எனத் தமிழில் பேசி உலகத்தை திரும்பி பார்க்க வாத்தார். படத்தின் விழா நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள் ஹிந்தி மொழியில் நடந்தாலும் அங்கு தமிழில் பேசி பல இடங்களில் தக் லைஃப் தந்திருப்பார் ஏ. ஆர். ரஹ்மான்.
நினைவுச் சின்ன பணிகள்
செம்மொழியான தமிழ் மொழிக்கான மாநாட்டிற்கு இசையமைத்து பெருமை சேர்த்த இவர் தற்போது தமிழை நீயே ஒளி எனக் குறிப்பிட்டு நினைவுச் சின்னம் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்த நினைவுச் சின்னத்தின் முன்மாதிரி வடிவத்தை பதிவிட்ட ஏ.ஆர். ரஹ்மான், நீயே ஒளி, தமிழ் வளம் வாழ்க எனக் குறிப்பிட்டுள்ள மாதிரி கட்டட வடிவப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கான பணிகளை ஏ.ஆர். ரஹ்மானின் இம்மர்ஸிவ் என்டர்டெய்ன்மென்ட் குழு செய்து வருகிறது.
