A.R.Rahman: நான் கடன்பட்டவன்.. ஆனா.. இதெல்லாம் பண்ண மாட்டேன்- உறுதியாக நிற்கும் ஏ.ஆர். ரஹ்மான்
A.R.Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் போதைப் பழங்களை ஊக்குவிக்கும் பாடல்களையும், கெட்ட வார்த்தைகள் உள்ள வரிகளையும் எப்போதும் பயன்படுத்த மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.

A.R.Rahman: தமிழ் மட்டுமல்லாது உலக அளவில் தனது இசையின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டவர் ஏ.ஆர். ரஹ்மான். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகில் பல சாதனைகளையும், இசையில் சோதனை முயற்சிகளையும் செய்து வருகிறார். இவர், ஜனவரி 17 அன்று நடைபெற்ற சூஃபி இசை நிகழ்ச்சியில் தனது மறைந்த குரு பத்ம விபூஷண் உஸ்தாத் குலாம் முஸ்தபா கானுக்கு அஞ்சலி செலுத்தினார்.
குருவிற்கு அஞ்சலி
மும்பை NR டேலண்ட் & ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஏற்பாடு செய்த ஹாஸ்ரி என்ற சூஃபி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஹ்மான், “நான் எப்போதும் இந்துஸ்தானி பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ள விரும்பினேன், கான் சாப் என்னை உடனடியாக தனது குடும்பத்தில் ஒருவராக ஆக்கினார்.
அவர் எப்போதும் மிகவும் ஊக்கமளிப்பவராக இருந்தார். அவர் போன்ற சிறந்த மேஸ்ட்ரோக்கள் ஹரிஹரன், சோனு நிகாம் மற்றும் ஷான் போன்ற பிரபலமான திரை இசைக் கலைஞர்களை உருவாக்கினர். கான் சாப்பினால் தான் நான் எனது லோ ரேஞ்ச் இசையை பயன்படுத்த கற்றுக்கொண்டேன். நான் லோ ரேஞ்ச் இசைகளை பயன்படுத்துவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை,
நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்
ஆனால் அவர் பரிந்துரைத்த பயிற்சிகள் எனக்கு பிற்காலத்தில் உதவியது. வெள்ளை பூக்கள் (கன்னத்தில் முத்தமிட்டால்; 2002) மற்றும் மலர்கள் கேட்டேன் (ஓ காதல் கண்மணி; 2015) உட்பட எனது பல தமிழ் பாடல்களில் நான் லோ ரேஞ்ச் இசையை பயன்படுத்தினேன், அதற்கு நான் கான் சாப்புக்குக் கடன்பட்டிருக்கிறேன்,” என்றார்.
பாடல் வரிகள் என்பது பிரார்த்தனை
பின் அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான், பாடல் வரிகளின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். அதில், பல்வேறு வகையான இசைகளில் பரிசோதனை செய்ய ஆர்வமாக இருந்தாலும், தரமற்ற பாடல் வரிகளைக் கொண்ட பாடல்களை ஒருபோதும் ஏற்கமாட்டேன் எனக் கூறியுள்ளார்.
“என்னைப் பொறுத்தவரை, பாடல் வரிகள் என்பது ஜிக்ர் (பிரார்த்தனை மற்றும் நினைவு) போன்றது. பாடல் வரிகள் மக்களின் மனதையும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் பாதிக்கிறது என்று நான் நம்புகிறேன். எதிர்மறையான பாடல் வரிகளைக் கொண்ட எதையும் நான் எதிர்க்கிறேன்.
மொழிகளுக்கு எல்லை இல்லை
இன்றைய பாலிவுட் மற்றும் பாலிவுட் அல்லாத இசைக் காட்சியில் பஞ்சாபி பார்ட்டி பாங்கர்ஸ் மற்றும் ராப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதை ஏற்றுக்கொண்டாலும், ஆபாசமான பாடல் வரிகளுக்காக பஞ்சாபி பாடல்கள் விமர்சிக்கப்படுவது குறித்து ரஹ்மான் என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்டது. அதற்கு “மொழிகளின் எல்லைகளை நான் நம்பவில்லை. எதுவும் அழகாக இருந்தால் அதை நான் ரசிப்பேன். தமிழர்கள் கூட பல பஞ்சாபி பாடல்களைக் கேட்கிறார்கள்,
இது என் இசையில் இருக்காது
அதேபோல் பஞ்சாபியர்களும் தமிழ் பாடல்களைக் கேட்கிறார்கள். ஒரு இடத்தின் கலாச்சாரத்தை வரையறுப்பதில் இசை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன். எனவே, போதைப்பொருளை ஊக்குவிக்கும் பாடல்களையும், கெட்ட எதையும் நான் எதிர்க்கிறேன். சில நேரங்களில், திரைப்படங்களுக்கு அத்தகைய விஷயங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் அது மட்டுமே இருக்கக்கூடாது.” எனக் கூறினார்.
7 வருடமாக ஏற்பட்ட தாக்கம்
முன்னதாக ஏ.ஆர். ரஹ்மான் அளித்த பேட்டியில், ஒரு குடிகார கிதார் இசைக் கலைஞர் என் இசையை மிக இழிவாக பேசினார் என்று கூறினார். நான், தனியாக இசையமைக்கத் தொடங்கியதற்கு முன் பல்வேறு இசைக் கலைஞர்களுக்கு இசையை வாசித்து வந்தேன். அப்போது, ஒரு குடிகார கிதார் கலைஞர் என் இசையை மிகவும் அசிங்கப்படுத்தியதுடன், நீ என்ன இசைக்கிறாய் என கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட அந்த கேள்வி எனக்குள் 7 வருடமாக தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்ததாகவும் கூறினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்