Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை.. ஒரு ஆண்டுக்கு பிறகு வந்த தீர்ப்பு - முழு பின்னணி
Lokesh Kanakaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், அவர் இயக்கிய லியோ படத்துக்கு அனைத்து தளங்களில் இருந்தும் தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் ஒரு ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ என்ற ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் கடந்த 2023இல் வெளியானது. பாக்ஸ ஆபிஸ் வசூலில் ரூ. 600 கோடிகளுக்கு மேல் அள்ளிய இந்த படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
லியோவுக்கு தடை கோரி வழக்கு
லியோ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரைச் சேர்ந்த ராஜமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்த இப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளதோடு, துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகளும், வீட்டிலேயே துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை தயாரிப்பது பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், பல்வேறு மத சின்னங்களை பயன்படுத்தி மதம் தொடர்பான முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, படத்தில் எதிரிகளை பழிவாங்க பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும், போதைப்பொருள் பயன்படுத்துதல், மனிதர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட வன்முறை மற்றும் பார்க்கத்தகாத காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
கலவரம், சட்ட விரோத செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் செய்தல், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்துதல், மக்களைக் கொல்வதை தற்காப்பு செயலாகக் கூறுவது, பொது அதிகாரத்தை அச்சுறுத்துவது, போலீஸ் பாதுகாப்புக்காக நீதித்துறை அதிகாரிகளிடம் பொய் சொல்வது, கார், இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் அனைத்து குற்றங்களையும் செய்ய முடியும் போன்ற காட்சிகள் மூலம் சமூகத்துக்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கிறார்.
இதன்மூலம் இளம் சிறார்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதுபோன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்.
எனவே, லியோ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் லியோ திரைப்படக்குழு மீது வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து படமாக்கியதற்கு, இந்திய குற்றவியல் தண்டனை சட்டங்களின் படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். லியோ படத்தை எந்த தளத்திலும் திரையிடாதவாறு தடை விதிக்க வேண்டும். லியோ படத்தை முற்றிலும் தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.
விளம்பர நோக்கோடு தொடரப்பட்ட வழக்கு
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லியோ பட குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, விளம்பர நோக்கோடு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது.
இதனையடுத்து, நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
லியோ தடை கோரிய வழக்கு பின்னணி
இந்த மனு மீது ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வு அளித்த உத்தரவில், "லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன, இதுதொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விரிவான பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்து, வழக்கை ஒத்தி வைத்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் பார்த்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் ரூ.1000 வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஒரு ஆண்டு கழித்து இந்த வழக்கு மீண்டும் விசாரணை வந்த நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடையை செய்திகள்