விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை
புலி படத்தில் பெற்ற வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு வெளியான புலி படத்தில் நடித்த விஜய், அந்தப் படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் ரூ. 15 கோடி மறைத்ததாக அவர் மீது வருமான வரித்துறையினர் ரூ. 1.5 கோடி அபராதம் விதித்தினர். இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், 2015ஆம் ஆண்டு அவரிடம் நடத்திய சோதனையின்போது கைபற்றிய ஆவணங்களுடன் வருமான வரித்துறை அலுவர்கள் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.
அதில், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற ரூ. 15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்துள்ளனர். இதையடுத்து வருமானத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் மாதம் வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அபராதம் விதப்பதாக இருந்தால் 2019ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் எனவும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அனிதா சுமந்த முன்பு இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், "விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு வருமான வரித்துறைக்கு" நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, புலி படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் நடிகர் விஜய்யின் வீடு, அலுவலகம் மற்றும் புலி பட தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது புலி படக்குழுவினர் ரூ. 25 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது.