Meiyazhagan Review : ‘என்ன ஆனது கத்தரிக்கோல்? எங்கே போனது கடிகாரம்?’ ‘மெய்யழகன்’ மெய்யாலுமே எப்படி? முழு விமர்சனம்!
Meiyazhagan Review : ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை என சம்மந்தமே இல்லாத ஜானரில் எல்லாம் படம் படம் எடுத்து ஆடுகிறது. சிரிக்க வைக்கும் காட்சிகள் சில இடங்களில் வருகிறது. ஆனால், அதை அடைய பல இடங்களை கடக்க வேண்டியிருக்கிறது’

Meiyazhagan Review : 96 படத்தை இயக்கிய ப்ரேம் குமார் இயக்கத்தில், அர்விந்த் சாமி, கார்த்தி நடிப்பில், சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மெய்யழகன். போஸ்டர், ட்ரெய்லர் இவையெல்லாம் பார்த்து, ‘படம் அப்படி இருக்கலாம்.. இப்படி இருக்கலாம்..’ என்று பலர், பலவிதமாக கணக்கு போட்டிருப்பார்கள். அந்த கணக்கு சரிதானா? படம் எப்படி என்பதை, ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு காட்சியை முடித்த கையோடு, மெய்யழகன் திரைப்படத்தின் விமர்சனத்தை வழங்குகிறோம்.
சொல்ல வந்த கதை இது தான்
சொந்தங்களால் சொத்தை இழந்து, இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் செல்லும் அர்விந்த்சாமியின் குடும்பம். 20 ஆண்டுகள் கடந்து, சொந்த ஊரில் நடக்கும் தன் சித்தி மகள் திருமணத்தில் பங்கேற்க, மீண்டும் தஞ்சாவூர் வருகிறார். அங்கு அவரை உபசரிக்க வரும் உறவுக்காரர் கார்த்தி உடன், அர்விந்த்சாமி பழக நேர்கிறது. கார்த்தியின் பெயர் கூட தெரியாமல், அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமல் அவருடன் பழகும் அர்விந்த்சாமி, இறுதியில் தன்னை தெய்வமாக பாவிக்கும் கார்த்தியின் பெயர் கூட தெரியாமல் இருக்கிறோமே என்கிற குற்ற உணர்வில், அந்த இரவு முடிந்து விடியும் போது, சென்னை வந்துவிடுகிறார். அதன் பின் கார்த்தியின் பெயர் மெய்யழகன் என்பதை அறிந்து, டைட்டில் கார்டு போட்டு படத்தை முடிக்கிறார்கள்.
பக்கம் பக்கமாக வசனங்கள்
இப்போது சொன்னது தான் கதை. இதை கேட்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் பார்க்கும் போது? 3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால தூரத்தில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தின் காட்சிகளை பார்க்கும் போது செலவே இல்லை; ஆனால், காகிதங்களுக்கு பெரிய அளவில் செலவாகியிருக்கும். அந்த அளவிற்கு டயலாக்..!