Manjummel Boys Box Office: அட… அட… எந்தா மோனே.. மஞ்சும்மல் பாய்ஸின் வசூல் எவ்வளவோ? - முழு விபரம் இங்கே!
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் விபரங்கள் இங்கே!
மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பல பிரபலங்களும் இந்தப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சென்று குகை ஒன்றில் சிக்கிக்கொள்வதும், அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுமே படத்தின் ஒன்லைன். இந்த நிலையில் இந்தப்படத்தின் வசூல் தொடர்பான விபரங்கள் இங்கு வெளியாகி இருக்கின்றன.
இந்தப்படம் வெளியான அன்றைய தினம் 3.3 கோடி ரூபாய் வசூல் செய்தது. முதல் நாள் படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி பாசிட்டிவாக கருத்துக்களை பகிர, படத்தை ரசிகர்களை திரையரங்கிற்குள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.
அதன் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் வசூல் கூடத்தொடங்கியது. அதன் பின்னர் வசூல் சற்று இறங்கியது. நேற்று முன் தினம் 2.7 கோடி வசூல் செய்த இந்தத்திரைப்படம் நேற்றைய தினம் 3.1 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
படம் வெளியாகி 10 ஆம் நாளான இன்று 0.12 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தமாக பார்க்கும் போது இந்தியாவில் இந்தப்படம் இன்றைய தினம் மொத்தமாக 29.57 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 5 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப்படம் உலக அளவில் 50 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த வருடம் மலையாள சினிமாவுக்கான வருடம் என்று சொல்லலாம். காரணம், இந்த வருடத்தில் வெளியான டொவினோ தாமஸின் அன்வேஷிப்பின் கண்டதும், மம்முட்டியின் பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கின்றன.
குறிப்பாக, மஞ்சும்மல் பாய்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தை சிறப்பு செய்யும் வண்ணம், அந்தப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடலை, படத்தின் முக்கியமான இடமொன்றில் புகுத்தி இருந்தார்கள். அது மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. கமல்ஹாசனும் படக்குழுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தப்படத்தை பார்த்து கமல்ஹாசன் அழுது விட்டதாக குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ சிலர் குணா படத்தில் இடம் பெற்ற சில விஷயங்கள் இந்தப்படத்தில் இருப்பதாக சொன்னார்கள். அதனைதொடர்ந்துதான் நான் இந்தப்படத்தை பார்த்தேன். எனக்கு திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது.
கிளைமாக்ஸில் குணா படத்தில் இடம் பெற்ற பாடல் வந்த போது மொத்த திரையரங்கமே ஆர்ப்பரித்து கைத்தட்டியது. மிகவும் நெகிழ்ச்சிகரமான அந்த மொமண்டில் நான் அழுது விட்டேன்.
கிட்டதட்ட 33 வருடங்களுக்கு பிறகு குணா படத்திற்கான மரியாதை கிடைத்தது போல உணர்ந்தேன். படத்தை பார்த்த கமல்ஹாசனும் அழுது விட்டார். நாங்கள் அதனை படமாக்கும் போது, இந்தளவு ரிஸ்க் இருக்குமா? என்பதை நாங்கள் உணரவில்லை. ஆனால் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்க்கும் போது, நாங்கள் உண்மையில் இவ்வளவு பெரிய ரிஸ்கை எடுத்து இருக்கிறோமா என்று தோன்றியது.” என்று பேசினார்.

டாபிக்ஸ்