வடிவேலுவுக்கு எதிராக பேசமாட்டேன்னு உத்தரவு கொடுங்க.. டைம் கேட்ட சிங்கமுத்து.. வடிவேலு - சிங்கமுத்து வழக்கில் டிவிஸ்ட்
வடிவேலுவுக்கு எதிராக பேசமாட்டேன்னு உத்தரவு கொடுங்க.. டைம் கேட்ட சிங்கமுத்து.. வடிவேலு - சிங்கமுத்து வழக்கில் டிவிஸ்ட் பற்றி பார்ப்போம்.

நடிகர் வடிவேலு பற்றி அவதூறு ஏற்படுத்தும் கருத்துகளைக் கூறக் கூடாது என சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
மேலும், நடிகர் வடிவேலு பற்றி அவதூறு ஏற்படுத்தும் கருத்துக்களைக் கூறக்கூடாது என உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணைப்பிறப்பித்துள்ளது.
தன்னைப் பற்றி யூட்யூப் சேனல்களுக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் அவதூறாகப் பேசியதற்காக ரூ.5 கோடியை மான நஷ்டத்துக்காக வழங்கும்படி நடிகர் வடிவேலு, சிங்கமுத்து மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். மேலும் தன்னைப்பற்றி அவதூறாகப் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு மனுதாக்கல் செய்திருந்தார்.
அதன்மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது, வழக்கை தாக்கல் செய்த பிறகும் நடிகர் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் என நடிகர் வடிவேலு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அவதூறு கருத்துகளைப் பரப்பவில்லை என சிங்கமுத்து தரப்பு வாதம்:
நடிகர் வடிவேலுவின் மனு மீதான வழக்கில் சிங்கமுத்து சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், அவதூறாகப் பேசியது எது என நடிகர் வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும், திரைத்துறை சார்ந்தவர்களின் கருத்துகளை மட்டுமே பேட்டியில் குறிப்பிட்டதாகவும், நடிகர் சிங்கமுத்து குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் வடிவேலு தரப்பில், நடிகர் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகள் அளித்து வருவதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் வழக்கு தாக்கல் செய்தபின் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை எனவும்; மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசிவாய்ப்பு வழங்கி வழக்கை ஒத்திவைக்கவேண்டும் எனவும் நடிகர் சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், வடிவேலுவுக்கு எதிராக கொடுத்த அவதூறு கருத்துக்களைத் திரும்ப பெற்றுக்கொள்ளும்படியும், அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் சொல்லமாட்டேன் என உத்தரவு அளிக்கும்படியும் வலியுறுத்தி மனு தாக்கல் செய்யக்கோரி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் வடிவேலு பற்றிய அவதூறு வீடியோக்களை நீக்கக் கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்துவுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
பல நகைச்சுவை நடிகர்களுக்கு நான் வசனம் எழுதி கொடுத்ததால் என்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு:
‘’நான் மற்ற நிறுவனங்களின் திரைப்படங்களில் நடிக்க என்னை வடிவேலு அனுமதிக்கவில்லை.
என்னைப் பற்றி தவறான தகவல்களை பல தயாரிப்பாளர்களிடம் கூறி எனக்கான திரைப்பட வாய்ப்புகளை அவர் தான் கெடுத்தார். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்க அவர் என்னைப் பயன்படுத்திக் கொண்டார்.
நான் அவருடன் இருந்தபோது மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு வசனம் எழுதி கொடுக்க என்னை அனுமதிப்பதில்லை. ஆனால், அதையும் மீறி பல நகைச்சுவை நடிகர்களுக்கு நான் வசனம் எழுதி கொடுத்ததால் என்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
நான் வாங்கிக் கொடுத்த ஒரு சொத்தில் வில்லங்கம் இருந்ததால் அதைப் பயன்படுத்தி தனக்கு எதிராகப் போலீசில் புகார் அளித்தார். அந்த சொத்தை வாங்கியதால் வடிவேலுவுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படவில்லை. ஆனால், ரூ.7 கோடியை ஏமாற்றிவிட்டதாக அவர் தனக்கு எதிராக அளித்த புகார் காரணமாக இன்று வரை அந்த வழக்கை எதிர்கொண்டு வருகிறேன். நான் வடிவேலுவுக்கு எதிராக எந்தவொரு அவதூறு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை'’ எனத் தெரிவித்தார்.

டாபிக்ஸ்