அவதூறு கருத்து பகிர்வு.. ஆறு ஆண்டுகளாக நடைபெறும் விசாரணை.. சிறை செல்கிறாரா எஸ்.வி.சேகர்?
ஆறு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கான சிறை தண்டனையை உறுதி செய்தாலும், மீண்டும் மேல்முறையீடுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் எஸ்.வி.சேகர். பாஜகவின் நிர்வாகியாக இருந்து வரும் இவர் பெண் பத்திரிகையாளர் குறித்து பகிர்ந்த அவதூறு கருத்து வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எஸ்.வி.சேகர் மீது வழக்கு
கடந்த 2018இல் தனது ஃபேஸ்புக் பதிவில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்துகளை பகிர்ந்திருந்தார் நடிகர் எஸ்.வி.சேகர். இதுதொடர்பாக பத்திரிகையாளர் அளித்த புகார் அடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து எம். எல். ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் 2019ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தது.
தண்டனை எதிர்த்து மேல்முறையீடு
இந்த வழக்கில் அபராத தொகையை செலுத்திய எஸ்.வி. சேகர், தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது மீண்டும் வந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் எஸ்.வி.சேகருக்கு அளிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த உத்தரவை மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த உயர் நீதிமன்ற, சிறை தண்டனையை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.வி.சேகர் அவதூறு கருத்து
பெண் பத்திரிகையாளர் குறித்து தரக்குறைவாக விமர்சித்து எஸ்.வி.சேகர் பகிர்ந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவரது கருத்தை கண்டித்து சென்னையில் உள்ள எஸ்.வி.சேகர் வீட்டின் முன்பு பத்திரிகையாளர்கள் போராட்டமும் நடத்தினர். அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நடிகர் எஸ்.வி.சேகர் சாதாரண நபர் அல்ல. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கல்வியறிவு பெற்றவர். ஒரு தவறான கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிடும்போது ஏற்படும் பின்விளைவு குறித்து நன்கு உணர்ந்தவர். தவறுதலாக இந்த அவதூறு பதிவை வெளியிட்டதாக அவர் கூறுவதை ஏற்க இயலாது. ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர்களையும் அவதூறாக விமர்சனம் செய்திருக்கிறார். எனவே, சிறை தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்" என்று வாதிட்டார்.
எஸ்வி சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தவறுதலாக குறிப்பிட்ட ஒரு பதிவினை எஸ்.வி சேகர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த கருத்தை உடனடியாக நீக்கியதுடன், மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும், சாட்சிகள் விசாரணை சட்டம் 65Bஇன் படி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே, சிறை தண்டனையும், கீழ் கோர்ட்டு தீர்ப்பையும் ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
எந்த பதிவுகள் வந்தாலும், அதை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுவீர்களா? படிக்காமல் பகிர்ந்ததாக தெரிவித்தால் என்ன காரணத்துக்காக பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார்.
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கான சிறை தண்டனையை உறுதி செய்தாலும், மீண்டும் மேல்முறையீடுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்