‘என்னைப்பற்றி அவர் பேசியது சந்தோஷம்தான்.. அவருக்கு கஷ்டம் கொடுக்காம நிகழ்ச்சிய இங்கேயே நடத்துறேன்..’ - லிடியன் பேட்டி!
அவர் என்ன சொன்னாலும், அந்த வார்த்தைக்குள் உள்ளார்ந்த அர்த்தம் என்பது இருக்கும். ஆகையால், அதை மிகவும் பொறுமையாக கேட்டு, புரிந்துகொண்டு நாம் நம்முடைய வேலையில் கவனம் செலுத்த வேண்டும். - லிடியன் நாதஸ்வரம் விளக்கம்!

லிடியன் நாதஸ்வரனிடம் இளையராஜா சிம்பொனி இசையை அமைக்கச் சொன்னதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு இளையராஜா விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ‘ஒரு முறை லிடியன் நாதஸ்வரம் என்னிடம் பாடம் கற்றுக் கொள்வதற்காக வந்திருந்தான். அப்போது அவன், நானும் ஒரு சிம்பொனி இசையை உருவாக்கி இருக்கிறேன் என்று, அவன் ப்ரோகிராம் செய்த சிம்பொனி இசையை என்னிடம் போட்டுக் காண்பித்தான். அந்த இசையை கேட்ட சில நொடிகளிலேயே, அதனை நான் நிறுத்தச் சொல்லி விட்டேன்.
அத்துடன் அவனிடம், இது சிம்பொனி இசை இல்லை. முதலில் சிம்போனி இசை என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டு, அதன் பின்னர் அந்த இசையை உருவாக்கு என்று கூறினேன்.’ என்று அதில் பேசி இருந்தார்; இது சமூகவலைதளங்களில் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அன்று உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து லிடியன் பாலிமர் தொலைக்காட்சிக்கு பேசி இருக்கிறார்.
லிடியன் பேட்டி
அவர் பேசும் போது, ‘ இளையராஜா சார் அன்றைய தினம் நீயும் சிம்பொனி கற்றுக்கொள். நன்றாக கற்றுக்கொண்டு, திறமையை வெளிப்படுத்தி வீடு முழுக்க விருதுகளை வாங்கி வைக்க வேண்டும் என்று கூறினார். அதை அவர் சொன்ன போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இரண்டு, மூன்று நாட்கள் கடந்ததும் நான் சிம்பொனி போன்ற ஒன்றை கம்போஸ் செய்து அவரிடம் காண்பித்தேன். 30 செகண்டுகளிலேயே அதனை அவர் நிறுத்தச் சொல்லி, இது சிம்பொனி இசையே இல்லை. இது சினிமா பின்னணி இசை போன்று இருக்கிறது. ஆகையால், சிம்பொனி இசையை ஒழுங்காக கற்றுக்கொள் என்றார்.
உத்வேகமாக எடுத்துக்கொண்டேன்
அவர் சொன்னதை உத்வேகமாக எடுத்துக்கொண்டு 2 வருடங்கள், அதனை நான் உள்ளார்ந்து ஆராய்ச்சி செய்தேன். என்னுடைய 1330 திருக்குறள்களுக்கு இசையமைக்கும் கனவு வேலையில், ஆங்காங்கே சிம்பொனி இசையை சேர்த்திருக்கிறேன்.
இந்த வேலை முடிந்தவுடன், சிம்பொனி வேலையை முழுமையாக முடித்து கம்போசிங் செய்து, ரெக்கார்டு செய்வேன். நான் இசையமைப்பதற்கு காரணமே அவர்தான். சிம்பொனி இசையை உருவாக்குவதற்கு காரணமும் அவர்தான். நிறைய பேர் ராஜா சார் யாரையும் பாராட்டமாட்டார் என்று சொல்கிறார்கள். அவர் மிகவும் உண்மையான ஒரு மனிதர்.
அவர் என்ன சொன்னாலும், அந்த வார்த்தைக்குள் உள்ளார்ந்த அர்த்தம் என்பது இருக்கும். ஆகையால், அதை மிகவும் பொறுமையாக கேட்டு, புரிந்துகொண்டு நாம் நம்முடைய வேலையில் கவனம் செலுத்த வேண்டும். என்னை அவர் பல முறை தட்டிக்கொடுத்திருக்கிறார். என்னுடைய கனவு இளையராஜா சாருக்கு கஷ்டம் கொடுக்காமல், லண்டனின் தலைசிறந்த சிம்பொனி குழுவை சென்னைக்கு வரவழைத்து, இளையராஜாவை அந்த நிகழ்ச்சியின் முதல் சீட்டில் உட்கார வைத்து என்னுடைய சிம்பொனி இசையைக் கேட்கவைக்க வேண்டும்.
புதிய தொடக்கம்
நான் தற்போது உருவாக்கி இருக்கும் சிம்பொனியை இசையை பிரிட்டிஷ் கம்போசர் ஆண்ட்ரீமுக்கு அனுப்பி வைத்தேன். அவர் அதனைக்கேட்டு விட்டு, இது சிம்பொனி இசை உலகத்திற்கு புதுவிதமான இசையை கொடுக்கும். இது உனக்கான புதிய தொடக்கம் என்றார். அங்கிருந்துதான் நான் புதிய தொடக்கம் (நியூ பிகினிங்) வார்த்தையை எடுத்து என்னுடைய சிம்பொனி இசை நிகழ்ச்சிக்கு தலைப்பாக வைத்திருக்கிறேன்.
இளையராஜா சார் என்னைப் பற்றி பேசியது எனக்கு சந்தோஷமான விஷயம்தான். நான் அவரை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். சிம்பொனி இசை பற்றியும், என்னுடைய திருக்குறள் இசை ஆல்பம் குறித்தும் அவரிடம் நான் பேச வேண்டும். அதில் ராஜா சாரையும் நான் பாட வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.’ என்று பேசினார்.

டாபிக்ஸ்