Actor Kumarimuthu: காமெடி நடிகர் குமரிமுத்து நினைவு தினம் இன்று.. சிரிப்பாலே மக்களை வென்றது எப்படி?
Kumarimuthu Memorial day: வித்தியாசமான சிரிப்பாலேயே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த காமெடி நடிகர் குமரிமுத்துவின் நினைவு தினம் இன்று (பிப் 28).
1980களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் வலம் வந்தனர். ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். அப்படி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களில் ஒருவர் தான் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து. மாறுகண்களுடன்மிகவும் சாதாரணமான தோற்றத்தை கொண்ட குமரிமுத்து, சினிமாவில் பல இன்னல்களையும், கஷ்டங்களையும் கடந்து திரைத்துறையில் சாதித்தவர்.
15 வயதில் கன்னியாகுமரியில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்த முத்தையாவை குமரிமுத்துவாக்கி பெருமை சேர்த்தவர் மறைந்த நடிகர் நாகேஷ். 'பொய் சொல்லாதே' என்கிற படத்தில் நடிகர் நாகேஷ்தான் குமரிமுத்துவை முதன் முதலில் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்.
'மனசுக்குள் மத்தாப்பு' என்கிற படத்துல குமரிமுத்து வைத்தியரா நடித்திருப்பார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் குமரிமுத்து அவரோட டிரேட் மார்க் சிரிப்பை கேஷுவலா சிரிக்க, அதைப் பார்த்த இயக்குநரோ, இதே மாதிரி படத்துலேயும் சிரிங்கன்னு கேட்டிருக்கார். அப்புறம் அதுவே சினிமாவுல குமரிமுத்துவுக்கான அடையாளமாகிப் போச்சுன்னு அவரது மகள் எலிசபெத் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவை தவிர கருணாநிதி மீது கொண்ட பற்றின் காரணமாக தி.மு.க. பேச்சாளராகவும் இருந்தார். குமரிமுத்து என்ற பெயரை கேட்டாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அவரின் தனித்துவமான அந்த சிரிப்பு தான். அந்த தனித்துவமான சிரிப்பே பல படங்களில் இவர் நடிக்க வாய்ப்பை பெற்று தந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் குமரி முத்து. கடைசியாக விஜய்யின் 'வில்லு' படத்தில் நடித்திருந்ததார்.
சிறந்த யதார்த்த நடிகர், சிறந்த பேச்சாளர் என தனித்துவமான குணங்களுடன் விளங்கிய குமரிமுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ல் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் தற்போது இவ்வுலகில் இல்லை என்றாலும் இவருடைய நகைச்சுவையும் எதார்த்தமான நடிப்பும் இன்றும் அப்படியே மக்களின் மனதில் மாறாமல் இடம்பெற்றுள்ளது.
மண்ணை விட்டு மறைந்தாலும் தனது வித்தியாசமான குரல் வளத்தாலும், கள்ளம் கபடமற்ற சத்தம் போட்டு சிரிக்கும் தன்மையினாலும் வெகுவாக தமிழ் ரசிகர்கள் மனங்களை வென்ற 'சிரிப்பலைகளின் நாயகன்' குமரிமுத்துவின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..!
டாபிக்ஸ்