பிரபல நடிகரின் தாயார் காலமானார்! இரங்கல் தெரிவித்த துணை முதலமைச்சர்!
நடிகரும், பிக் பாஸ் கன்னட தொகுப்பாளருமான கிச்சா சுதீப்பின் தாயார் இன்று காலை காலமானார். சமூக வலைதளங்களில் பிரபலங்களின் இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன.

நடிகரும், கன்னட பிக்பாஸ் தொகுப்பாளருமான கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் இன்று (அக்டோபர் 20) காலை காலமானார். உடல்நலக் குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் சில காலமாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவக் குழுவினர் அவரை நிலைப்படுத்த முயன்ற போதிலும் எதுவும் பலனளிக்காத நிலையில் இது நிகழ்ந்துள்ளது . காலை ஏழு மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் ஜே.பி.நகரில் உள்ள சுதீப்பின் இல்லத்திற்கு நண்பகலில் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, 'அவருக்கு 86 வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இரங்கல் தெரிவித்த கர்நாடக துணை முதல்வர்
இதனை அறிந்த கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சுதீப் மற்றும் சரோஜாவின் படத்தை வெளியிட்டு, “நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் திருமதி சரோஜா காலமான செய்தி கேட்டு மனம் உடைந்தேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் சுதீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும். ஓம் சாந்தி.” எனப் பதிவிட்டுள்ளார்.