Kichcha Sudeep: சிறந்த நடிகர் விருதை ஏற்க மறுத்த 'நான் ஈ' வில்லன்.. இதுதான் காரணமா?
Kiccha Sudeep: சிறந்த நடிகர் விருதுக்காக பலரும் கனவு காணும் போது கன்னட நடிகர் கிச்சா சுதீப், தனக்கு வழங்கப்பட இருந்த சிறந்த நடிகர் விருதை ஏற்க மறுத்துள்ளார்.

Kichcha Sudeep: கன்னட நடிகரான கிச்சா சுதீப் தமிழில் நான் ஈ, புலி, பாகுபலி, முடிஞ்சா இவன புடி போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் இயக்குநர் ராஜமௌலியின் நான் ஈ படத்தில் வெளிப்படுத்திய வில்லத்தனமான நடிப்பை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது.
2019ம் ஆண்டு விருது
இந்நிலையில், கிச்சா சுதீப்பிற்கு கர்நாடக அரசு சிறந்த நடிகர் விருது வழங்க முன்வந்துள்ளது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியான 'பயில்வான்' எனும் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, கர்நாடக மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் பிரிவில் சுதீப் தேர்வு செய்யப்பட்டார்.
கிச்சா சுதீப்புக்கு சிறந்த நடிகர் விருது
கர்நாடக அரசு புதன்கிழமை (ஜனவரி 22) 2019 ஆம் ஆண்டுக்கான மாநில ஆண்டு திரைப்பட விருதுகளை அறிவித்தது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை விருதுகளுக்கு கிச்சா சுதீப், அனுபமா கவுடா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
'பயில்வான்' படத்தில் அவர் ஏற்ற பாத்திரத்திற்காக சுதீப்பும், 'த்ரியம்பகம்' படத்தில் ஏற்ற பாத்திரத்திற்காக அனுபமாவும் இந்த விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கோவிட் காரணமாக 2019 க்குப் பிறகு கர்நாடக அரசின் விருதுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தான் தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதுகளில் 2020 முதல் 2024 வரையிலான விருதுகள் இன்னும் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.
விருதை ஏற்க மறுத்த சுதீப்
இருப்பினும், கர்நாடக அரசு தனக்கு வழங்க முன்வந்த சிறந்த நடிகர் விருதை கிச்சா சுதீப் நிராகரித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், 'பல நாட்களாக எந்த விருதுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதையே தற்போதும் தொடர விரும்புவதாகவும்' தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் மூலம் இதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது மரியாதை
அந்தப் பதிவில் "மதிப்பிற்குரிய கர்நாடக அரசு மற்றும் நடுவர் குழுவினருக்கு... சிறந்த நடிகர் பிரிவில் விருது பெறுவது மிகப்பெரிய மரியாதை. இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு நன்றி. இருப்பினும், சில தனிப்பட்ட காரணங்களால், பல ஆண்டுகளாக நான் எந்த விருதுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையே தொடர விரும்புகிறேன்" என்று சுதீப் கூறினார்.
தகுதியான நடிகர்கள் உள்ளனர்
"இந்தக் கலைக்கு உயிர் கொடுத்த பல தகுதியான நடிகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த விருதுக்கு என்னை விட அதிக தகுதியானவர்களில் ஒருவர் இந்த விருதைப் பெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். விருதுகளைப் பொருட்படுத்தாமல், முழு மனதுடன் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன்.
மன்னிப்பு கோரிய சுதீப்
நடுவர் குழுவின் இந்த அங்கீகாரம் என் உற்சாகத்தை அதிகரித்துள்ளது" என்று சுதீப் கூறினார். இந்த அங்கீகாரமே தனக்குப் போதுமானது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தனது முடிவால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும் சுதீப் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்து மூலம் கிச்சா சுதிப்பின் பெயர் கர்நாடக மாநிலத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிட்டு வருகின்றனர்.

டாபிக்ஸ்