44 Years of Guru :எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்.. கமல்ஹாசனின் ஸ்டைலான நடிப்பு.. அழகின் உச்சத்தில் ஸ்ரீதேவி..44 ஆண்டில் குரு!
44 Years of Guru : கமல்ஹாசனின் ஸ்டைலான நடிப்பு, ஸ்டண்ட் காட்சிகள், கதையின் விறுவிறுப்பு, என அனைத்தும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து இந்த படத்தை வெற்றிப் படமாக மாற்றியது.

கமல்ஹாசன் நடித்த ரீமேக் படம் தான் குரு. கமல் மற்றும் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். அந்தப் பட்டியலில் எப்போதும் இந்த திரைப்படத்திற்குத் தனி இடம் உண்டு. ஹிந்தியில் தர்மேந்திரா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜூக்னு என்ற திரைப்படத்தின் உரிமம் வாங்கப்பட்டு குரு என்ற பெயரில் தமிழில் வெளியானது.
கமல்ஹாசனின் ஸ்டைலான நடிப்பு, ஸ்டண்ட் காட்சிகள், கதையின் விறுவிறுப்பு, அழகின் உச்சத்தில் ஸ்ரீதேவி என அனைத்தும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து இந்த படத்தை வெற்றிப் படமாக மாற்றியது.
திரைப்படத்தின் கதைக்களம்
இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் குருவாக நடித்திருந்தார். திரைப்படத்தின் கதைக்களம் ஒன்றும் புதிதல்ல. இருப்பவர்களிடமிருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பது தான் படத்தின் கதை.
ஆனால் இந்த திரைப்படம் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம் சில அழகான விஷயங்களைக் கோர்த்துக் கொடுத்தது தான். சுதந்திரப் போராட்ட காலத்தில் போராளியாக வாழும் முத்துராமன், வெள்ளைக்காரர்கள் பாராட்டுகளைப் பெருமையாக நினைக்கக்கூடிய முத்துராமனின் அப்பா பூர்ணம் விஸ்வநாதன் அடிக்கடி முத்துராமனை காவல்துறையினரிடம் காட்டிக் கொடுப்பார்.
கொள்ளையடிப்பதில் குரு
முத்துராமனை அடிக்கடி தப்பிக்க வைக்கும் வெண்ணிறாடை நிர்மலா ஒரு போராட்டத்தில் முத்துராமன் இறந்துவிட்டார் எனும் செய்தியைக் கேட்கிறார். அதன் காரணமாக வெண்ணிற ஆடை நிர்மலா மகனை அழைத்துக் கொண்டு கட்டிட வேலைக்குச் செல்கிறார். அங்கே எஸ்.வி.ராமதாஸ் நிர்மலாவிடம் தவறாக நடந்து கொள்வதால் அவர் இறந்து விடுகிறார்.
அந்த சிறிய பையன் ராமதாசை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி வருகிறார். அந்த பையன் தான் கிடையாது கமல்ஹாசன் தான். வெளி உலகத்திற்கு அசோக் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டு கொள்ளையடிப்பதில் குருவாகத் திகழ்கிறார்.
ஸ்ரீதேவியை கமல்ஹாசன் காதலிக்கிறார்
சொத்துக்காக ஆசைப்பட்டு வேறொரு பையனை இவர் தான் உங்கள் பேரன் எனக் கூறி பூரணம் விஸ்வநாதன் ஏமாற்றுகின்றனர். அவரும் அந்தப் பையனை வளர்க்கிறார். அவர் தான் மோகன் பாபு. கமல்ஹாசன் சிறுவயதில் கொலை செய்த ராமதாஸ் மகள் தான் ஸ்ரீதேவி. இது குறித்து எதுவும் தெரியாமல் ஸ்ரீதேவியை கமல்ஹாசன் காதலிக்கிறார்.
ஆதரவற்றோர் இல்லம் ஒன்று நடத்திக் கொள்ளையடித்த பணத்தை வைத்து அந்த பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார் கமல்ஹாசன். நம்பியாரிடம் இருந்து தங்கம், பணம் என அனைத்தையும் கமல்ஹாசன் கொள்ளை அடிக்கிறார்.
காவல்துறையினரால் பாதுகாக்கப்படும் தங்க மீன் ஒன்றை கமல்ஹாசன் பல தடைகளை மீறிக் கொள்ளையடிக்கிறார். கொள்ளையடித்து விட்டு வரும் வழியில் முத்துராமன் கமல்ஹாசனைக் காப்பாற்றுகிறார். பிற நாளில் இருவரும் தந்தை மகன் எனத் தெரிய வர மகனைக் காப்பாற்றுவதற்காக முத்துராமன் நான் தான் குரு என பொய் சொல்கிறார்.
44 ஆண்டில் குரு
இறுதியாகத் தந்தையைக் காப்பாற்றி கொள்ளை கூட்டத்தை எப்படி கமல்ஹாசன் அளிக்கிறார் என்பது தான் கதை. இளையராஜாவின் இசையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.
குறிப்பாக, “எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா”, ”பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா” போன்ற பாடல்கள் செம ஹிட்.
கமல்ஹாசன் சினிமா பட்டியலில் வசூலை வாரி குவித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. பல்வேறு திரையரங்குகளில் இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை வாரிக் குவித்தது. இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகளாகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்