Kamal Haasan: “ லஞ்சம் ரொம்ப ரொம்ப அதிகமாகிருச்சு.. கன்டென்ட் கொடுத்த அரசியலுக்கு நன்றி..” - கமல்ஹாசன் பேச்சு!
Kamal Haasan: அப்போது இருந்த படபடப்பே எங்களுக்கு அப்போது அடங்கவில்லை. இந்தியன் முதல் பாகத்தை எப்படியாவது ரிலீஸ் செய்வோம் சார் என்று ஷங்கர் சொன்னார். இரண்டாம் பாகம் எடுப்பதற்கு இன்றும் கதைகள் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. - கமல்ஹாசன் பேச்சு!

Kamal Haasan: இந்தியன் 2 பத்திரிகையாளர் சந்திப்பு இன்றைய தினம் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், “ ஒரு சினிமாவை செய்து விட்டு, அதனை இரண்டாவது முறையாகச் செய்யும் போது, அதனை அதே இயக்குநர் இயக்குவது என்பது எனக்குத் தெரிந்து, இரண்டு பேர் அதனை செய்திருக்கிறார்கள். ஒருவர் cecil b demille, இன்னொருவர் Alfred Hitchcock.
39 Steps என்ற படத்தை முதலில் கருப்பு, வெள்ளையாக எடுத்த Hitchcock, பின்னர் கலரில் எடுத்தார். அதே போல cecil b demille 10 commandments என்ற படத்தை முதலில் கருப்பு வெள்ளையாக எடுத்தார். பின்னர் அதனை கலரில் எடுத்தார். இன்று வரையிலும் அதனை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இப்போது அந்த பெருமை ஷங்கருக்கு கிடைத்திருக்கிறது. ஷங்கருக்கு கிடைத்திருப்பதால், தற்போது அது எனக்கும் கிடைத்திருக்கிறது. பியூ சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில், சிவாஜி கணேசன் நடித்தார். ஆனால், அப்போது அவர் இல்லை.
எப்படியாவது ரிலீஸ் செய்வோம் சார்
நான் இந்தியன் 2 இரண்டாம் பாகத்தை பார்க்கிறேன். இந்தியன் முதல்பாகத்தின் டப்பிங்கின் போது, இதனை நாம் இரண்டாம் பாகமாக எடுக்கலாமே என்ற ஷங்கரிடம் கூறினேன். அப்போது இருந்த படபடப்பே எங்களுக்கு அப்போது அடங்கவில்லை. இந்தியன் முதல் பாகத்தை எப்படியாவது ரிலீஸ் செய்வோம் சார் என்று ஷங்கர் சொன்னார். இரண்டாம் பாகம் எடுப்பதற்கு இன்றும் கதைகள் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. லஞ்சம் இன்னும் அதிகமானதன் காரணமாகத்தான், இந்தியன் தாத்தாவின் இரண்டாவது வருகைக்கு பெரிய அர்த்தமே உருவாகி இருக்கிறது.
நன்றாக நடிக்கும் நடிகர்கள், நண்பர்கள் சிலர் இங்கு இல்லை. கடந்த தெருவில்தான் விவேக் தொடர்பான காட்சிகளை ஷங்கர் எடுத்துக்கொண்டிருந்தார். ஏதோ இப்போதுதான் நடந்தது போல இருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1, 2 உதாரணம். இங்கு ரவி வர்மன், ஷங்கர் சாரும், கமல் சாரும் நினைத்தால் கூட இந்த மாதிரியான படத்தை எடுக்க முடியாது என்றார். அதனை நான் மறுக்கிறேன். எடுத்து இருக்கிறோம். அதுதான் இந்தியன் 3.
இந்தியன் 3
இவ்வளவு கால இடைவெளியை எடுத்துக்கொண்டதற்கு நாங்கள் காரணமல்ல. இயற்கை, விபத்துகள் என பலவை இடையூறாக வந்தன. அதிலிருந்து மீட்டு, இந்தியன் தாத்தாவை தோளில் தூக்கி வந்த லைகா நிறுவனத்திற்கும், ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கும் இந்தியன் 2 -வும், 3 யும் கடமை பட்டு இருக்கிறது” என்று பேசினார்.
ஷங்கர் பேச்சு
விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், " இந்த படத்தில் நிறைய குடும்பங்கள் வந்து போகும். படம் முடியும் போதும் அனைவரையும் யோசிக்க வைக்கும் என நம்புகிறேன். இந்த படம் சிறப்பாக அமைய கமல் ஹாசன் தான் காரணம்.
சாப்பிட முடியாது
அந்த மேக்கப் போட்டால் சரியாக சாப்பிட முடியாது. தண்ணீர், ஜூஸ் மாதிரி குடிக்க தான் முடியும். எல்லாருக்கும் முன்பு அவர் தான் வருவார். அவர் தான் கடைசியாக செல்வார். அவரின் உழைப்பை சொல்லவே முடியாது.
இன்றைய காலகட்ட இந்தியன் தாத்தா
பகுதி 1 விட கமலை இரண்டாம் பகுதியில் நன்றாக பார்க்க முடியும். இன்றைய காலகட்டத்தில் இந்தியன் தாத்தா இருந்தால் என்னென்ன செய்வார் என்பதை வைத்து தான் இந்தியன் 2 படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
70 நாட்கள் மேக்கப்
முதல் பாகம் தமிழ்நாட்டை சார்ந்து மட்டும் இருந்தது. இரண்டாம் பாகம் எல்லைகளை கடந்து உருவாகி உள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் நடிக்கும் போது 20 நாட்கள் மேக்கப் போட்டு நடித்தார் கமல். ஆனால் இரண்டாம் பாகத்திற்கு 70 நாட்கள் அந்த மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். நான் எதிர்பார்த்தை விட அனிருத் சிறப்பாக பாடல் அமைத்து கொடுத்து இருக்கிறார்.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் விவேக்
இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருவார். நீண்ட காலங்களுக்கு பிறகு அவரை திரையில் பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காஜல் அகா்வால், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து உள்ளனா். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இதன் படப்பிடிப்புக்கு மத்தியில், பிப்ரவரி 2020ல் படக்குழுவில் ராட்சத கிரேன் விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர்.
அதன்பின், சூட்டிங் தொடங்கினாலும் கோவிட் பிரச்னை தலைவிரித்தாடியது. இதனால் ஒட்டுமொத்தமாக, இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பின் சமீபத்தில் 2024 மார்ச்சில் அதன்பிடிப்பு முடிவடைந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்