Kabilan Vairamuthu: குற்றப்பரம்பரை அரசியல்; ஆங்கிலத்திற்கு சென்ற கபிலன் வைரமுத்து படைப்பு!- கபிலன் வைரமுத்து!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kabilan Vairamuthu: குற்றப்பரம்பரை அரசியல்; ஆங்கிலத்திற்கு சென்ற கபிலன் வைரமுத்து படைப்பு!- கபிலன் வைரமுத்து!

Kabilan Vairamuthu: குற்றப்பரம்பரை அரசியல்; ஆங்கிலத்திற்கு சென்ற கபிலன் வைரமுத்து படைப்பு!- கபிலன் வைரமுத்து!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 02, 2024 01:03 PM IST

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன் - கபிலன்!

கபிலன் வைரமுத்து!
கபிலன் வைரமுத்து!

1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு, கபிலன் வைரமுத்து எழுதி 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகோள் என்ற நாவல், தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

பிரபல பதிப்பகமான ரூபா நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறார்கள். தற்காலத்தின் மெய்நிகர் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி மற்றும் பெருந்தரவு கொள்ளை ஆகியவைகளைக் களமாகக் கொண்ட நாவலில், நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருங்காமநல்லூர் போராட்டம் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கபிலன்வைரமுத்து தமிழில் எழுதிய இந்த நாவல் மீரா ரவிஷங்கரின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து கபிலன்வைரமுத்து கூறுகையில் “ஆகோள் ஒரு படைப்பு அல்ல. ஒரு பயணம். அது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு செல்வதில் மகிழ்ச்சி. மொழி,தேசம், பண்பாடு தாண்டி அனைவரும் முகம் பார்க்கும் ஒரு படைப்பாக இந்த நாவலைக் கருதுகிறேன்.

இந்த களத்தில் எழுதுவதற்கு இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். விரைவில் எழுத்துப்பணிகளைத் தொடங்கவிருக்கிறேன். ரூபா பதிப்பதகத்திற்கும் மொழி பெயர்த்த மீரா ரவிஷங்கர் அவர்களுக்கும், மிஸ்டிக்ஸ் ரைட் மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கும் என் நன்றி” என்று பேசினார்.

 

வைரமுத்து காதல் கதை!

பிரபல பத்திரிகையாளரான ராஜகம்பீரன் வைரமுத்து குறித்து ஆதன் தமிழ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

 

இது குறித்து அவர் பேசும் போது, “ கவிஞர் வைரமுத்து ஒரு ஆகச் சிறந்த கவிஞன். அவரது 19ஆவது வயதிலேயே அவரது கவிதை தொகுப்பு வெளிய வந்துவிட்டது. அவரது முதல் கவிதை தொகுப்பு வைகறை மேகங்கள். அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அதை பாடத்திட்டத்தில் கொண்டு வந்து விட்டார்கள்.

இதைப் பார்த்த தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன், பச்சையப்பன் கல்லூரிக்கே சென்று, யார் இந்த வைரமுத்து என்று தேடி இருக்கிறார். அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கவராக வைரமுத்து இருந்தார். ஆனால் கல்லூரி விதிகளின்படி, ஒரு மாணவர் எழுதிய கவிதை தொகுப்பை, ஒரு பேராசிரியர் பாடமாக நடத்த முடியாது.

அது விதிகளுக்கு புறம்பானது. ஆகையால் அவரது கவிதை தொகுப்பு அந்த பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. வைரமுத்துவுக்கு பேராசிரியராக ஆக வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக வேலை செய்து கொண்டிருந்தார்.

வைரமுத்துவின் மனைவியான பொன்மணி, பச்சையப்பன் கல்லூரியிலேயே ஒரு ஆண்டு முந்தைய வகுப்பில் இருந்தார். வைரமுத்துவை விட பொன்மணி ஒரு வயது மூத்தவர்.

இவர்கள் இருவருக்கும் இடையே கவிதை சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்து, அவை பின்னாளில் காதலாக மாறியது. பொன்மணி பேராசிரியரின் மகள். ஆனாலும், பொன்மணியை கல்யாணம் செய்து கொண்டார் வைரமுத்து. இரண்டு பேரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இதற்கு இரு தரப்பிலும் பயங்கர எதிர்ப்பு இருந்தது.

அதனால், மிகவும் சிரமமான வாழ்க்கையையே வைரமுத்து எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். இரு தரப்பிலும் கைவிடப்பட்டு, பொருளாதார நெருக்கடியில், சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலம் அது.

முதலில், சினிமாவுக்குள் வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்குள் கிடையாது. காரணம் அப்போதே அவர் சினிமாவுக்கு எதிராக கவிதை எழுதினார். ஆனால் அவருடைய படைப்புகள் அனைத்தும் அவர் எதிர்பார்த்தபடி மக்களிடம் சென்று சேரவில்லை.

ஆகையால்தான் தன்னுடைய படைப்பின் மீதான கவனத்தை அதிகரிக்க, அவர் சினிமா என்ற அந்த ஆயுதத்தை கையில் எடுத்தார். இதனையடுத்துதான் அவர் பாரதிராஜாவை சந்திக்க முடிவு எடுத்து, அவரை பார்ப்பதற்காக தினம் தினம் நடந்தார். ஆனால் அப்போதெல்லாம், ஒரு பிரபல இயக்குநரை பார்ப்பது என்பது மிகவும் கடினமான காரியம்.

ஆனாலும், வைரமுத்து தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை கிட்டத்தட்ட ஒரு வருடம் நடையாய் நடந்தார். இறுதியாக அவர் எதிர்பார்த்த நாள் வந்தது. அவர்களது உதவியாளர்கள் வழக்கம்போல் பாரதிராஜா பிசியாக இருக்கிறார் என்று சொல்லும் பொழுதே, பாரதிராஜா அங்கிருந்து வந்துவிட்டார். இதையடுத்து அவரிடம் பேசிய வைரமுத்து, தன்னுடைய கவிதை தொகுப்பை கொடுத்து, வாய்ப்பு இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்று தன்னம்பிக்கையுடன் பேசினார்.

அவரைப்பார்த்த பாரதிராஜா பத்தோடு பதினொன்றாக, இவனும் சினிமாக் கிறுக்கன்தான் போல.. என்ற ரீதியில் அந்த புத்தகத்தை வாங்கி பைக்குள் போட்டுவிட்டு சென்று விட்டார். அன்று அவர் இலங்கை பயணம் செய்வதாக இருந்தது.

விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த பொழுது, நேரப் போக்கிற்காக அந்த கவிதை தொகுப்பை எடுத்து படித்தார். அந்த கவிதை தொகுப்பில் தேனி வாடை அடித்தது. தனது சொந்த மண்வாசம் அடித்த அடுத்த ஷனத்திலேயே வைரமுத்து நம்மூர் காரர் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

இதையடுத்து அவர் இளையராஜாவிடம் வைரமுத்துவை அழைத்துச் சென்றார். ஆனால் இளையராஜாவுக்கு வைரமுத்து எழுத வைப்பதில் விருப்பமில்லை. இருப்பினும் பாரதிராஜா சொல்கிறார் என்பதற்காக, அவரை எழுத வைத்து, அவர் எழுதியது நன்றாக இல்லை என்று சொல்லி, அனுப்பி விடலாம் என்பதை ராஜா திட்டமாக வைத்திருந்தார்.

ஆனால் வைரமுத்து எழுதிய அந்த பாடலானது இளையராஜாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. தொடர்ந்து இவர் மிகப்பெரிய திறமைசாலி என்பதையும் புரிந்து கொண்டார். இதையடுத்து வைரமுத்துவின் மீது இளையராஜாவுக்கு காதலே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து, எந்த தயாரிப்பாளர் வந்தாலும் பாடல்களை எழுதுவதற்கு வைரமுத்துவை பரிந்துரைத்தார் இளையராஜா.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: