Adhisaya Manithan: திகிலின் உச்சம்.. ரசிகர்களை அலறவிட்ட அதிசய மனிதன்.. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திகில் படம்
Adhisaya Manithan: நாளைய மனிதன், அதிசய மனிதன் என இரண்டு பாகங்களும் ரசிகர்கள் நடுங்க வைத்ததுடன், விமர்சக ரீதியாகவும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது. மூன்றாம் பாகத்துக்கான விதை போட்டபோதிலும் இன்று வரையிலும் ஏனோ இந்த திகில் படம் உருவாக்கப்படவில்லை.

Adhisaya Manithan: மனிதனின் சாவுக்கு பின்னரும் உயிரை பெறும் விதமாக மருந்தை கண்டுபிடிக்க அதன் பக்க விளைவுகளால் இறந்து புத்துயிர் பெற்ற மனிதன் கொலைகாரனாகவும், மீண்டும் அழிக்கவே முடியாத மனிதனாகவும் மாறும் கதைக்களத்தில் நாளைய மனிதன் என்ற பெயரில் 1989இல் திகில் படம் வெளியானது. வேலு பிரபாகரன் இயக்கியிருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகமாக, முதல் பாகத்தின் தொடர்ச்சியுடன் அதிசய மனிதன் படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
முதல் பாகத்தில் இறுதிக்காட்சியில் உயிர் பிழைத்து கொலைகாரனாக மாறிய மனிதனை கிணற்றுக்குள் வீசிய பின்னரும், கிணற்றில் இருந்து அவரது கை வெளியேறுவது போல் காட்டி, இந்த மனிதன் உயிருடன்தான் இருக்கிறான் என்பதுபோல் முடித்திருப்பார்கள். இதையடுத்து இரண்டாம் பாகமான அதிசய மனிதன் படத்தில் கிணற்றில் இருந்து வெளியேறும் அந்த மனிதன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க முடியுடன் பார்ப்பதற்கே கோரமாக காட்சியளிக்கிறார்.
தனது கொலை வெறி அடங்காத அவன் அருகில் இருக்கும் மேன்ஷனில் தங்கியிருக்கும் இளம் ஜோடிகள் ஒவ்வொருத்தராக கொல்கிறார். இறுதியில் அந்த மனிதன் ஊசி செலுத்தப்பட்ட கதிரியக்க தோட்டாக்களால் கொல்லப்படுகிறார். அப்போதும் எலும்புகூடாக அவன் உயிர் எழுவது போல் காட்டி தொடரும் இரண்டாம் பாகத்தை என முடித்திருப்பார்கள்.