நடிகையின் மீது காதல்..விக்ரம் முகத்தை அறிந்த படம்.. சொந்த கதையை படமாக்கிய இயக்குநர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகையின் மீது காதல்..விக்ரம் முகத்தை அறிந்த படம்.. சொந்த கதையை படமாக்கிய இயக்குநர்

நடிகையின் மீது காதல்..விக்ரம் முகத்தை அறிந்த படம்.. சொந்த கதையை படமாக்கிய இயக்குநர்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 30, 2024 05:50 AM IST

Vinnukum Mannukum: நடிகர் விக்ரமுக்கு சேது திரைப்படம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் நடிகர் விக்ரம் முகத்தை மக்கள் மத்தியில் யார் என்று காட்டியது.

விண்ணுக்கும் மண்ணுக்கும்
விண்ணுக்கும் மண்ணுக்கும்

திரையரங்கில் சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இடையே வரும் விளம்பரத்தின் போதும் நடிகை தேவயானி வருவதைக் கண்டு கிராமத்தில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த விக்ரமுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது.

யதார்த்தமாக கிராமத்திற்குப் படப்பிடிப்பிற்காக வரும் தேவயானியை நடிகர் விக்ரம் தொடர்ந்து காதலிக்கிறார். விக்ரமின் குடும்பம் அவரை மருமகளாக ஏற்றுக் கிராமத்தில் படப்பிடிப்பு எடுக்க ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் இது நடிகை தேவயானிக்கு தெரியாது. அவரது அம்மாவிற்கு மட்டும் தெரியும்.

நடிகர் விக்ரமிற்கு அண்ணனாக நடிகர் சரத்குமார், அண்ணியாக நடிகை குஷ்பு நடித்திருப்பார்கள். திருமணத்திற்காக ஒத்துக் கொள்ளும்படி கேட்கும் பொழுது நடிகை தேவயானி நான் ஒரு பிரபல சினிமா நடிகை, நீங்கள் சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அதிக ஆசைப்பட வேண்டாம் என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

அந்தப் பெண்ணை திருமணம் செய்யாமல் நீ வரக்கூடாது என சரத்குமார் விக்ரமை அனுப்பி வைக்கிறார். அதன் பின்னர் நடிகர் விக்ரம் தேவயானியை காதலித்து திருமணம் செய்கிறார் இதுவே இந்த திரைப்படத்தின் கதையாகும்.

கதையின் போக்கும், கதாபாத்திரங்களின் நடிப்பும் யதார்த்தமாக இருக்கும். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக தற்போது வரை இருந்து வருகிறது இந்த விண்ணுக்கும் மண்ணுக்கும். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்திருப்பார். படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

நடிகர் விக்ரமுக்கு சேது திரைப்படம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் நடிகர் விக்ரம் முகத்தை மக்கள் மத்தியில் யார் என்று காட்டியது.

இந்த படம் வெளியாகி அடுத்த ஒரு மாதத்தில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் ராஜகுமாரன் கதாநாயகி தேவயானியை நிஜமாகவே திருமணம் செய்து கொண்டார். சூரிய வம்சம் திரைப்படத்தில் இயக்குநர் ராஜகுமாரன் உதவி இயக்குநராகப் பணி புரிந்து வந்துள்ளார்.

அப்போதிலிருந்து இயக்குநர் ராஜகுமாரனுக்கும் நடிகை தேவயானிக்கும் காதல் இருந்து வந்துள்ளது. அவரது காதல் கதையையே விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படமாக எடுத்திருந்தார் என அப்போது பெரிதாகப் பேசப்பட்டு வந்தது.

இவர்கள் திருமணத்திற்கு உண்மையிலேயே தேவயானி வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. குடும்பத்தை மீறி இயக்குநர் ராஜகுமாரனை நடிகை தேவயானி ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.

காதலுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. ஆழமான அன்பால் எதுவும் சாத்தியம் என விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ராஜகுமாரன் நிரூபித்து இருப்பார்.

அதேபோல் தனது சொந்த வாழ்க்கையிலும் நிரூபித்துக் காட்டினார். இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் அசராமல் தொலைக்காட்சியில் இந்த படத்தைப் பார்க்கும் பல மக்கள் இருந்து வருகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9