Indian 2: ‘தாத்தா வராரு...கதற விட..’; தமிழ்நாட்டில் ‘இந்தியன் 2’ படத்திற்கு அதிகாலை சிறப்புக்காட்சியா? - உண்மை என்ன?
Indian 2: ஆந்திர அரசு அங்கு படம் வெளியான முதல் வாரத்திற்கு மட்டும், தினமும் 5 காட்சிளை திரையிட்டு கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ‘இந்தியன் 2’ விற்கு சிறப்பு காட்சி இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன் 2’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில், கமல்ஹாசன் உடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது.
தமிழகத்தில் அதிகாலை காட்சிகள்
தமிழ்நாட்டை பொருத்தவரை, நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களின் படங்களுக்கு முதல் நாளன்று காலை 4 மணி காட்சி கொடுப்பதுவழக்கத்தில் இருந்தது. ஆனால், கடந்த வருடம் துணிவு, வாரிசு திரைப்படங்கள் ஒன்றாக வெளியான போது, அது தொடர்பான தியேட்டர் கொண்டாட்டத்தில், அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் பூதகாரமாக வெடித்த நிலையில், தமிழ்நாட்டில் இனி அதிகாலை காட்சிகள் ஒளிபரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சி ஒளிப்பரப்பப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கு அரசு அனுமதி அளிக்க வில்லை. அதற்கு மாற்றாக காலை 9 மணி காட்சிக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதே போல படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தவும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
தெலங்கானாவில் டிக்கெட் விலை என்ன?
தெலுங்கில் இந்தப்படம் ‘பாரதியூடு 2’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஆந்திர அரசு அங்கு படம் வெளியான முதல் வாரத்திற்கு மட்டும், தினமும் 5 காட்சிளை திரையிட்டு கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் கூடுதலாக 75 ரூபாயும், சிங்கிள் ஸ்கீரின்களில் கூடுதலாக 50 ரூபாயும் வசூலித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஆந்திராவில் சட்ட மோதல்
நாக் அஸ்வினின் இயக்கத்தில் வெளியான கல்கி படத்தின் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டி, ராகேஷ் ரெட்டி என்பவர், மாநில அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது. ‘இந்தியன் 2’ படத்தை பொருத்தவரை, அங்கு சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை.
முன்னதாக, இயக்குநர் ஷங்கர் இந்தியன் தாத்தா உருவான கதையை ‘தி இந்து’ (ஆங்கிலம்) யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டி இங்கே!
தாத்தா உருவானது எப்படி?
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ என்னுடைய கோபத்தினுடைய உருவம் தான் இந்தியன் தாத்தா. நான் சிறுவயதாக இருந்த பொழுது, ஜாதி சான்றிதழ் வாங்குவதற்கு, வருமான வரி சான்றிதழ் வாங்குவதற்கு, நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு நன்றாகவே தெரியும். அதை நான் ஒரு ஃபிலிம் மேக்கராக மாறும்பொழுது, திரைப்படமாக மாற்றினேன். இப்படி, எல்லா சாதரண மனிதர்களின் மனதில் இருக்கக்கூடிய மொத்த கோபத்தின் உருவம்தான், இந்தியன் தாத்தா கேரக்டர். சரி, அந்த கேரக்டர் கோபப்படக்கூடிய ஆள் என்று முடிவு செய்து விட்டோம்.
யார் அப்படி இருப்பார் என்று யோசிக்கும் பொழுது, அவருக்கு இப்படி கோபப்படுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, அந்த கேரக்டர் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருக்கலாம் என்று முடிவு செய்தோம். காரணம், வெளிநாட்டவர்களிடமிருந்து கடுமையாக போராடி மீட்ட சுதந்திரத்தை, உள்நாட்டவர்கள் நாசம் செய்வதற்கு நான் விடமாட்டேன்; அதை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அந்த கேரக்டர் நினைப்பதற்கு அது சரியாக இருக்கும். அப்படித்தான் அந்த கேரக்டரை நாங்கள் வடிவமைத்தோம்.
வாழ்க்கையில் இருந்துதான் கதை எடுக்கிறோம்
அதன்பின்னர் அந்த கேரக்டருக்கு ஒரு குடும்பத்தை கொண்டு வந்தோம். அப்படியே அந்தக் கதை விரிந்தது. எல்லா கதைகளையுமே நாம் வாழ்க்கையில் இருந்து தான் எடுக்கிறோம். அதை அப்படி இருந்தால் எப்படி இருக்கும், இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்கிறோம். அப்படித்தான் கதையை உருவாக்குகிறோம். வாழ்க்கையின் அன்றாட பிரச்சினைகளில் இருந்து கதை எடுக்கும் போது, அது நமக்கு நெருக்கமான கதையாக மாறுகிறது. நமக்கு நெருக்கமான கதையாக மாறும் போது அது மக்களுக்கு நெருக்கமான கதையாக மாறுகிறது.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்