Ilaiyaraaja: “எனது வேதனை தான் உங்களை ஆறுதல்படுத்தும் இசை..” பவதாரணி நினைவு நாள் இசை நிகழ்ச்சி - இளையராஜா உருக்கம்
Ilaiyaraaja on Bhavatharini: மறைந்த மகள் பவதாரணியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் இன்ஸ்டாவில் பேசியிருக்கும் இளையராஜா, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகி, இசையமைப்பாளருமான பவதாரணி, உடல்நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி காலமானார். இதையடுத்து பவதாரணியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது தந்தையும், இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா எமோஷனலாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது இன்ஸ்டாவில் மகள் பவதாரணியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் தனது குரலில் பேசியிருப்பதாவது, "என் அருமை மகள் பவதா எங்களை விட்டு பிரிந்த நாள். அன்பே உருவான அந்த மகள் பிரிந்த பின்பு தான், அந்த குழந்தை எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. காரணம் என்னுடைய கவனம் இசையிலேயே இருந்ததால், எனது குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டது இப்போது வேதனையை தருகிறது.
அந்த வேதனை தான் மக்கள் எல்லாம் ஆறுதல் படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
இசைநிகழ்ச்சி நடத்தவுள்ளேன்
பவதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 12ஆம் தேதி, அவரது திதியும் வருகிறது. அதை இரண்டையும் சேர்த்து நல்ல நினைவு நாள் நிகழ்ச்சி வைக்கும் எண்ணம் இருக்கிறது. அதில் எல்லா இசைக்கலைஞர்களும் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனது மகள் பவதா ஆத்மா சாந்தி அடைய இறவனை பிரார்திக்கிறேன்."
இவ்வாறு இசைஞானி இளைராஜா பேசியுள்ளார்.
பவதாரணி இறப்பு
தமிழ் சினிமாவில் பாடகியாவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்த பவதாரணி 5 மாதங்களுக்கும் மேலாக கல்லீரல் புற்று நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதையடுத்து புற்றுநோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இலங்கையும் சென்றுள்ளார். ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார்.
47 வயது நிரம்பிய பவதாரணியின் உயிரிழிப்பு திரையுலகினர், ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பிரபு தேவா நடித்த ராசய்யா படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் மூலம் பாடகியாக பவதாரணி ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறு வயதிலேயே என் பொம்மைகுட்டி அம்மாவுக்கு, தென்றல் சுடும், அஞ்சலி, சேதுபதி ஐபிஎஸ் போன்ற படங்களிலும் பாடியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார் பவதாரணி. பாரதி படத்தில் இடம்பிடித்த மயில்போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக சிறந்த பாடகி தேசிய விருதையும் வென்றார்.
இசைஞானி இளையராஜா இல்லாமல் எம்.எஸ். விஸ்வநாதன், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, சிற்பி, ஸ்ரீ காந்த் தேவா, ஜி.வி. பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பவதாரணி பாடல் பாடியுள்ளார்.
அதேபோல், நடிகை ரேவதி இயக்கிய மித்ர், மை பிரண்ட் என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். கடந்த ஆண்டில் வெளியான தளபதி விஜய் நடித்த தி கோட் படத்தில் சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் பவதாரணியின் குரல் ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
பவதாரணியின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கலை தெரிவித்த நிலையில், இசைஞானி இளையராஜா தனது மகள் பவதாரணியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “அன்பு மகளே” என்று குறிப்பிடிருந்தார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்