வரிந்து கட்டி வரும் விமர்சனங்கள்.. ‘கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்ல’ - ரெட்ரோ ட்ரோலுக்கு கார்த்திக் பதிலடி!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது புதுமையான கதை சொல்லும் நுட்பங்கள், தயாரிப்பின் போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சூர்யாவுடனான கூட்டு உணர்வு பற்றி விவாதிக்கிறார்.

நடிகர் சூர்யா நடித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, அதிக எதிர்பார்ப்புகளுடன் மே 1 அன்று வெளியான திரைப்படம், ரெட்ரோ. முன்னதாக ரெட்ரோ படத்தில் சூர்யாவின் லுக், ஆடைகள், டிரெய்லர், கனிமா பாடல் வரை என பலதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் படம் பார்க்க வந்தார்கள்.
ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன. இன்னும் சிலர் படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆன்லைனிலும் பலர் படத்தை கிண்டல் செய்து கமெண்டுகளையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
நான் எதனையும் பார்க்கவில்லை
அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது, ‘நான் எந்த விமர்சனத்தையும் பார்க்கவில்லை. காரணம், அதில் பெரும்பான்மையான விமர்சனங்களில் நம்பகத்தன்மை இல்லை. அதனால், நான் அதனை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
அத்துடன், சூர்யா ஒரு பேட்டியில் உங்களின் மற்றொரு ஸ்கிரிப்டடும் அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அதில் நடிக்க விரும்புவதாகவும் கூறியது குறித்து கேட்கும் போது, ‘ ஆமாம், உண்மையில் அதில் நடிப்பதற்கு அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் அந்தப்படத்திற்கு பெரிய பட்ஜெட்டும், அதிக காலமும் வேண்டும்.
அந்த படத்தை நான் நிச்சயமாக சூர்யா சாருடன் செய்வேன். ஆனால் அவருக்கு தற்போது ஏராளமான கமிட்மெண்டுகள் இருக்கின்றன. அதனால் அதனை எப்போது தொடங்குவோம் என்பது தெரியாது. என்னுடைய எல்லா படங்களையும் போலவே இதுவும் என்னுடைய கனவுக் கதைதான்.’ என்று பேசினார்.
இந்தியாவில் ரெட்ரோ திரைப்படம் வெளியான அன்றைய தினம் 19.25 கோடி வசூல் செய்த நிலையில், 2ம் நாள் 7.75 கோடி வசூல் செய்தது. அடுத்த நாளான சனிக்கிழமை 8 கோடி வசூல் செய்த நிலையில், 4 நாளான நேற்றைய தினம் 8 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
இதன் மூலம் மொத்தமாக ரெட்ரோ திரைப்படம் 43 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த தகவல்கள் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இவை படக்குழுவிடம் இருந்து வந்த அதிகாரப்பூர்வ தகவல் அல்ல.
எங்கே கோட்டை விட்டார்?
படத்தில், நடை, உடை, பாவனை, ஸ்டைல் என அனைத்திலும் புதிய சூர்யாவை பார்க்க முடிந்தது. கோபத்தின் உக்கிரத்திலும், காதலில் கரையும் இடங்களிலும் சூர்யாவின் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு வழக்கம்போல் சிறப்பு. ருக்மணியாக பூஜா ஹெக்டே, படத்தில் அவர் நடிப்பதற்கு நல்ல ஸ்பேஸ்.. முடிந்த அளவுக்கு அதனை பயன்படுத்தி இருக்கிறார்.
வில்லனாக ஜோஜூ ஒரு பக்கம் மிரட்டினாலும், அவரை விட ஸ்கோர் செய்து வில்லனிசத்தில் மிரட்டுவது விதுதான். இதர கதாபாத்திரங்களில் இடம் பெற்றிருக்கும் வித்தியாசத்தன்மை சுவாரசியமாக இருந்தாலும், படத்தில் அவர்களுக்கான ஸ்பேஸ் மிகவும் கம்மி!
பார்த்திராத களம்..
பார்த்திராத களம்.. பார்க்காத மனிதர்கள் என கதையில் புதுமை காட்டி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒவ்வொரு டிசைனில் அவர் காட்சிப் படுத்தி இருந்த விதம் ஸ்கிரீனில் பார்ப்பதற்கு பல இடங்களில் காமெடியாகவும், சில இடங்களில் சுவாரசியமாகவும் இருந்தது.
காதல், சிரிப்பு, போர், தம்மம் என 4 பாகங்களாக பிரித்து கதை சொன்ன கார்த்திக் சுப்புராஜ் அதற்கு ஏற்றவாறு காட்சிகளை அடுக்கி இருக்கிறார். முதல் பாதி காதலும் சிரிப்புமாக கடக்க, இரண்டாம் பாதி போரும், தம்மமுமாக நகர்கிறது.
முதல் பாதியில் இருந்த அழுத்தமும், சுவாரசியமும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். குறிப்பாக போருக்கு காரணமான கதை சொல்லல் பகுதி ஆடியன்சோடு கனெக்ட் ஆகாமல் போனது படத்தின் பெரும் பலவீனம். அதனால் இரண்டாம் பாதி முழுக்கவே கடும் அயர்ச்சி.

டாபிக்ஸ்