Ganja Karuppu: பூட்டப்பட்ட வீட்டை உடைத்து ஒயிட் வாஷ்.. கலைமாமணி விருதை காணோம்.. ஹவுஸ் ஓனர் மீது கஞ்சா கருப்பு புகார்
Ganja Karuppu Complaint: ஊருக்கு சென்றிருந்த போது பூட்டப்பட்ட வீட்டை உடைத்து ஒயிட் வாஷ் செய்துள்ளார் என தனது ஹவுஸ் ஓனர் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வருபவர் கஞ்சா கருப்பு. ஒரு காலகத்தில் பிஸியான நடிகராக இருந்து வரும் இவர் தற்போது போதிய வாய்ப்புகள் இன்றி குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார். இதையடுத்து கலையுலகில் சிறப்பாக செயல்படும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை, காமெடியனான கஞ்சா கருப்புக்கு வழங்கி தமிழ்நாடு அரசு கெளரவித்தது.
விருதை காணோம் என்று புகார்
இதைத்தொடர்ந்து சென்னை வளசரவாக்கம் ஸ்ரீ கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ. 20 ஆயிரம் வாடகை கொடுத்து இந்த வீட்டில் வசித்து வரும் கஞ்சா கருப்பு, தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் போலீசில் நடிகர் கஞ்சா கருப்பு புகார் அளித்திருக்கும் நிலையில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா கருப்பு தனது புகாரில், "நான் ஊரில் இல்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து,வேறு நபருக்கு வாடகைக்கு விட ஹவுஸ் ஓனர் முயற்சித்ததாக" கூறியுள்ளார். அத்துடன், சுவரில் மாட்டி வைக்கப்பட்ட தனது கலைமாமணி விருதையும் காணவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார்.
ஹவுஸ் ஓனருடன் மோதல்
வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் கஞ்சா கருப்புக்கும், அவரது ஹவுஸ் ஓனருக்கும் இடையே பல நாள்களாக பிரச்னை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கஞ்சா கருப்பு கூறும்போது, "தொடக்கத்தில் எனக்கும் ஹவுஸ் ஓனருக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை. அவர் கேட்பதற்கு முன்பாகவே நான் வீட்டு வாடகை கொடுத்து விடுவேன். சில நாள்களுக்கு முன் திடீரென்று வந்து வீட்டை காலி செய்ய வேண்டும். எனக்கு வீடு வேண்டும் என்று சொன்னார். அக்ரிமெண்ட் எல்லாம் போட்டுதான் வந்தேன். ஆனா அந்த அக்ரீமெண்டையும் ஒரு வருஷத்துக்குப் பிறகு புதுப்பிச்சே தரலை.
அதன் பின்னர் நான் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். அவரும் சரி என்று சொன்னார். சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது பூட்டிய வீட்டை உடைத்து ஒயிட் வாஷ் செஞ்சிருக்காங்க.
அதன் பின்னர் என் வீட்டுக்குள் இருந்த கலைமாமணி விருது டாலரை காணவில்லை. இதன் காரணமாகவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்." என்றார்.
கஞ்சா கருப்பு புகாரை தொடர்ந்து அவரது ஹவுஸ் ஓனரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரிடமும் முழுவதுமாக விசாரணை நடத்திய பின்னர் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சா கருப்பு படங்கள்
பாலாவின் பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கஞ்சா கருப்பு என பெயர் பெற்ற இவர், அமிரீன் ராம் படத்தில் சோலோ காமெடியனாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.
இதன் பின்னர் அமீர் இயக்கிய பருத்திவீரன், சசிக்குமாரின் சுப்பிரமணியபுரம், சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள், போராளிகள் என காமெடியில் கலக்கிய இவர் 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து, நடித்து கடனாளியான இவர் தனது சொந்த வீட்டை விற்றுள்ளார். தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் கஞ்சா கருப்பு ஹவுஸ் ஓனர் மீது குற்றச்சாட்டை முன் வைத்து புகார் அளித்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்