தமிழ் சினிமா ரீவைண்ட்: இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல்!ஏப்ரல் 28 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
ஏப்ரல் 28ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் முறையாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த படமாகவும், அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டிய இந்திய படமாகவும் இருந்து வரும் பாகுபலி 2 வெளியாகியுள்ளது. உலக அளிவில் கவனம் ஈரத்த இந்த படம் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

ஏப்ரல் 28, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் உலக சினிமா ரசிகர்களை இந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த பாகுபலி 2 வெளியாகியுள்ளது. இதுதவிர அதேமனிதன் என்கிற திகில் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ரிலீசான இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
பாகுபலி 2
எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பீரியட் ஆக்சன் படமாக 2017இல் வெளியாகி உலக அளவில் பேசப்பட்ட படம் பாகுபலி 2. பாகுபலி சீரிஸ் படங்களில் இரண்டாம் பாகமாகவும், முதல் பாகத்தில் பிரதான கதாபாத்திரமான பாகுபலியை மற்றொரு முக்கிய கதாபாத்திரமான கட்டப்பா குத்தி கொலை செய்யும் காட்சியுடன் முடிவடைந்த, அதற்கான பதிலை சொல்லும் விதமாகவும் இரண்டாம் பாகம் உருவாகியிருந்தது.
தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட்ட இந்த படம் மலையாளம் கன்னடம், இந்தி பின்னர் சீனா, ஜப்பான், ரஷ்ய மொழிகளிலும் கூட டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது.
பாகுபலி சீரிஸ் படங்களில் இரண்டு பாகங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல் வேட்டை நடத்தியது. அதிலும் பாகுபலி 2 ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி, இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் என்ற மைல்கல் சாதனையை எட்டிய முதல் இந்திய படம் என்ற பெருமை பெற்றது. அத்துடன் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியிருக்கும் இந்த படம், உலக அளவில் அதிக வசூலை பெற்ற இந்திய படமாக திகழ்கிறது.
படத்தின் இடம்பிடித்த அத்தனை நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது சிறந்த பணியை வெளிப்படுத்திய நிலையில் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்த படமாக மாறியது. மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்ற பாகுபலி 2 படம், பிலிம்பேர் விருது உள்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.
இந்திய சினிமாவில் கல்ட் அந்தஸ்தை பெற்ற படமாக இருக்கும் பாகுபலி, பான் இந்தியா சினிமாவுக்கான சந்தையை உருவாக்க காரணமாக அமைந்தது. பாகுபலி சீரிஸ் படத்துக்கு பின்னர் பல்வேறு படங்கள் பான் இந்தியா சினிமாக்களாக இந்தியா முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு வரவேற்பையும் பெற்றுள்ளன. இந்திய சினிமாவின் வியாபாரத்தை உலக அளவில் விரிவுபடுத்திய பெருமையை கொண்டிருக்கும் பாகுபலி 2 வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகிறது
அதே மனிதன்
கே. ராஜேஷ்வர் இயக்கத்தில் லிவிங்ஸ்டன், மகேஸ்வரி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க திகில் படமாக உருவாகி 2000ஆவது ஆண்டில் ரிலீசான படம் அதே மனிதன். சத்திமில்லாமல் ரிலீசான இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது.
வழக்கமான பேய் கதை போல் இல்லாமல் வித்தியாசமான திரைக்கதை அம்சத்தில் உருவாகியிருந்த அதேமனிதன் படம் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது
