'மாமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா .. கடின உழைப்பால் பிரபலங்களின் புகழ்ச்சி மழையில் நனைந்த சூரி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'மாமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா .. கடின உழைப்பால் பிரபலங்களின் புகழ்ச்சி மழையில் நனைந்த சூரி..

'மாமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா .. கடின உழைப்பால் பிரபலங்களின் புகழ்ச்சி மழையில் நனைந்த சூரி..

Malavica Natarajan HT Tamil
Published May 07, 2025 12:41 PM IST

மாமன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள சூரியை திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்தி அவரது வளர்ச்சியை பற்றி பெருமையாக பேசியுள்ளனர்.

'மாமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா .. கடின உழைப்பால் பிரபலங்களின் புகழ்ச்சி மழையில் நனைந்த சூரி..
'மாமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா .. கடின உழைப்பால் பிரபலங்களின் புகழ்ச்சி மழையில் நனைந்த சூரி..

எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற திரைப் பிரபலங்கள் நடிகர் சூரியை புகழ்ந்து பேசியுள்ளனர்.

2 நிமிட ட்ரெயிலரிலே கண் கலங்கினேன்

இந்நிகழ்வில் சிறுத்தை சிவா பேசுகையில், '' சூரி சாரை எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். அவர் திரைத்துறையில் பணியாற்றி இன்று மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார். சில பேர் வெற்றி பெறும்போது மனதிற்குள் சந்தோசம் ஏற்படும். அந்த மகிழ்ச்சியுடன் தான் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன். கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் சூரிக்கு போன் செய்து, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. படம் நிச்சயமாக ஹிட் ஆகும் என்று சொன்னேன். அதேபோல் மாமன் படத்தின் ட்ரெய்லரையும் பார்த்தேன். இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு மனம் நெகிழ்வது என்பது சகஜம். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து விட்டு கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை. இந்த ட்ரெய்லரை உருவாக்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியும் , வாழ்த்துக்களையும் சொல்கிறேன்'' என்றார்.

உடலெங்கும் தையல்

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், '' என்னுடைய சகோதரர் சூரி இந்த திரைப்படத்தில் அவர் அழகாக இருக்கிறார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சூரியின் இந்த உயரம் அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. அதன் பின்னால் கடுமையாக உழைத்தார். சீம ராஜா படத்திற்காக சூரியிடம் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்றார். ஆறு மாத காலமும் கஷ்டப்பட்டார். ஆனால் அந்த காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் ஆறே நிமிடத்தில் படமாக்கினோம். அன்று அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார். அப்போதே இவர் ஹீரோவாக உயர்வதற்கு தகுதியானவர் என நினைத்துக் கொண்டேன். விடுதலை படத்தில் நடித்த போது அவருக்கு உடலெங்கும் தையல் இருந்தது. ஒவ்வொரு தையலிலும் அவருடைய வாழ்க்கை உயர்ந்தது. தற்போது மாமனாக நிற்கிறார் என்றால்.. அதற்குப் பின்னால் அவருடைய கடும் உழைப்பு இருக்கிறது. இதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்றார்.

எல்லோருக்கும் இன்ஸ்பிரேஷன்

தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசுகையில், சூரியண்ணன் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். பத்து வருடமாக அவரை எனக்குத் தெரியும். காமெடியாக நடித்த பிறகு ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இது போல் இந்தியாவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை . இருந்தாலும் சினிமாவில் உள்ளவர்களுக்கு சூரியின் பயணம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். விடுதலை- கொட்டுக்காளி -கருடன் - என பல பரிமாணங்களை காட்டி தன் திறமையை நிரூபித்து இருக்கிறார்.

அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் அவர் எவ்வளவு அப்பாவியாக இருந்தாலும் ..தெளிவாக யோசிப்பவர் என்பதும் தெரியும். அவரிடம் இருக்கும் கதை அறிவு சிறப்பானது. அவரிடமிருந்து வெளியாகும் முதல் கதை மாமன். இன்னும் அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கிறது. அதை எப்போதாவது ஒன்று இரண்டு என்று வெளியிட்டால் அவர் இன்னும் உயரம் அடையலாம். அதே நேரத்தில் மற்றவர்களின் கதையிலும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் '' என்றார்.

இயல்பான சூரியின் மோசமான காலகட்டம் அது

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், '' இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும், சூரிக்கும் எமோஷனலான தொடர்பு உண்டு. இருவரும் ஒரே வீட்டிலிருந்து வந்திருப்பது போன்ற உணர்வு தான். நான் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இருந்து நிறைய இரவுகள் அவருடன் செலவழித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் என் மனதில் இவர் இவ்வளவு இயல்பானவராக இருக்கிறாரே எனத் தோன்றும். நான் சூரிய உடன் பழக தொடங்கிய போது அவருடைய மோசமான காலகட்டம் அது. அவருடைய காமெடி ஒர்க் அவுட் ஆகாமல் போன காலகட்டம் அது" என்றார்.

10ல் 5 கதை சூரிக்கானது

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், '' சூரி அண்ணனின் வளர்ச்சியை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இவருடைய வளர்ச்சி அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கிறது என சொன்னார்கள். உண்மையில் ஒருவருடைய வளர்ச்சியில் மற்றவர்கள் மகிழ்ந்தால் அதுதான் சிறப்பு. நானும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரிக்க தொடங்கி இருக்கிறேன். இதில் பத்து கதைகள் வந்தால் .. அதில் ஐந்து கதைகளில் சூரி ஹீரோ என்கிறார்கள்.‌ அதை பார்க்கும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்