25 ஆண்டுகால பயணம்.. பாலுமகேந்திரா பெருமை.. போட்டி நிறந்த உலகில்..பாலாவை வாழ்த்தி அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி
பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக வணங்கான் ஆடியோ வெளியீட்டு விழா இன்றைய தினம் சென்னையில் நடைபெற இருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரில் ஒருவரான இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படம். வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், அவருடன் இணைந்து, ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, சாயாதேவி, மிஸ்கின் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தின் நடித்துள்ளனர்.
இப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக வணங்கான் ஆடியோ வெளியீட்டு விழா இன்றைய தினம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கு வாழ்த்து தெரிவித்து எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில், ‘தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க சில இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் திரு. பாலாஅவர்களின் திரையுலக வெள்ளி விழாவும், அவர் இயக்கிய 'வணங்கான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வரும் டிசம்பர் 18ஆம் நாள் சென்னையில் நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
போட்டிகள் நிறைந்த தமிழ் திரை உலகிச் தனது முதல் படத்தையே வணிக நோக்கமின்றி, சமூக நோக்கத்துடன் வெற்றிப்படமாக எடுத்து, இன்று வரை தனது பாணியை யாருக்காகவும் கைவிடாமல், தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார். இயக்குநர் பாலா அவர்கள். வணிக நோக்கமின்றி, சாமான்ய மக்களின் வலியும், வேதனைகளையும் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்களை இயக்கி, கடந்த 25 ஆண்டுகளாக போட்டிகள் நிறைந்த தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தேடிக் கொண்டவர் 'இயக்குனர் திரு பாலா"
தனது திரையுலக குரு திரு பாலுமகேந்திரா' என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் இயக்குனர் திரு. பாலா அவர்களது கலைப்பயணம் வெற்றியுடன் தொடர வேண்டும்என்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுவதையொட்டி அந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது குறித்து அவரது எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது,
“இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
வணக்கம்!
கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம். அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள் கொடுத்தலிலும், துணை இருத்தலிலும் இச்சிறு உலகம் தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொள்கிறது.
பேரன்பு மட்டுமே உலகத்தை இயக்கும் விசை
அன்பினால் ஆகாதது உலகத்தில் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டுமே உலகத்தை இயக்கும் விசை. சினிமா ஒரு பேரன்பு கொண்ட பெரும் ஆலமரம். அம்மரத்தின் விழுதுகளில் ஒரு விழுது தான் இயக்குநர் பாலா. பலமான அந்த விழுது அம்மரத்தை உறுதியாகத் தாங்கியிருக்கிறது தனது பங்களிப்பின் மூலம்.அப்படியான பங்களிப்பின் மூலம் நிறைய நாயகர்களை, கலைஞர்களை தனது இருபத்தைந்து ஆண்டு காலத்தில் உருவாக்கி உள்ளார் இயக்குநர் பாலா. அதுவரை திறமை இருந்தும் முகவரி கிடைக்காமல் தவித்தவர்களைத் தேடி எடுத்து தன் படங்களையே அவர்களது முகவரியாக ஆக்கியவர் அவர்.
அவர் தன் கலை உளியால் துளித்துளியாக செதுக்கிய சிற்பங்கள் தான் தமிழ்த் திரை உலகம் என்கிற ராஜகோபுரத்தில் மின்னிக் கொண்டிருக்கின்றன. பாலா என்ற தனிமனிதர் ரத்தமும் சதையுமாக உருவாக்கிய சிறிய படப்பட்டியலில் அவர் சாதித்திருப்பது நீண்ட வரிசை. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப் போனவர்களில் அவரும் ஒருவர். எல்லோரும் ஒரு பாணியில் கடந்து பாதை அமைத்துக் கொண்டிருக்கும்போது, தனக்கென ஒரு பாணியை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர்.
மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள், உடலால்... உடல் புலன்களால் பாதிக்கப்பட்ட எளிய மனிதர்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் அன்பைத் தேடி அலைபவர்கள் என அதுவரை பேசப்படாத, பாலா உருவாக்கிய செல்லுலாய்டு மனிதர்கள் காலம் காலமாய் தமிழ்த் திரையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
அவர்களின் கடின வாழ்வைத் தன் அகத்தின் மூலம் பார்த்து பதிவு செய்த பாலாவின் திரை மொழி மிக அசாத்தியமானது. நாம் வாழும் காலத்தில் கலை ஆன்மா கொண்ட ஒரு மகத்தான மனிதனைக் கொண்டாடவும்... பெருமைகொள்ளச் செய்யவும் ஓடும் ஓட்டத்தில் நமக்கு நேரம் வாய்க்காமல் போயிருக்கிறது.
இன்னமும் அதைக் காலம் தாழ்த்திக் கொண்டே போகக் கூடாது. அவரது இருபத்தைந்தாம் ஆண்டை விமர்சையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்.
இயக்குநர் பாலா இயக்கி, அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் "வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடத்த உள்ளோம்.
இது பாலா என்கிற ஒரு தனிப்பட்ட இயக்குநருக்கான விழா மட்டுமல்ல. கால் நூற்றாண்டாக தமிழ்த் திரையை கலையம்சம் பொருந்திய தனது திரைக்காவியங்களால் நிறைத்த ஒரு மாமனிதனுக்கு நாம் செய்கிற மரியாதை. திரையுலகின் ஆகச்சிறந்த ஆளுமைகளும் வாழ்த்த, இன்னும் பல ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் இயக்குநர் பாலா ஆரோக்கிய நடைபோட, நீங்களும் உடனிருந்து வாழ்த்த அழைக்கிறோம்.
தமிழ்த் திரையுலகின் அனைத்து நண்பர்களையும் ஒரே குடும்பமாய் நின்று வாழ்த்த வருகை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அன்பும் நன்றியும்!
தயாரிப்பாளர்/இயக்குநர் சுரேஷ் காமாட்சி
மற்றும்
இயக்குநர் ஆர். கே. செல்வமணி
இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் மிஷ்கின்
இயக்குநர் சமுத்திரகனி
நடிகர் அருண்விஜய்
இயக்குநர் ராம்
இயக்குநர் ஏ. எல். விஜய்.” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
டாபிக்ஸ்