‘கம்யூனிஸ்ட் மாணவனாக மாறிவிட்டேன்’ மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் இயக்குனர் வெற்றிமாறன் பதில்!
‘விடுதலை படம் என்பது எனது 45 ஆண்டு வாழ்க்கையை விட நிறைய கத்துக்கொடுத்தது. நிறைய மனிதர்கள், தலைவர்களை பற்றி தெரிந்துகொண்டேன். விடுதலை படத்திற்கு முன்பு, மேடையை அலங்கரிக்கும் கவர்ச்சி பேச்சுகளை பேசும் தலைவர்கள் தான் என் கண்ணுக்கு தெரிந்தார்கள்’

மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில், இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்றார். அப்போது, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், வெற்றிமாறனிடம் கேள்விகள் கேட்டு, அவரிடம் பதில்கள் பெற்றார். இதோ கேள்விகளும், அதற்கு வெற்றிமாறன் அளித்த பதில்களும்:
மதுக்கூர் ராமலிங்கம்: இயக்குர் பாலுமகேந்திர பற்றிய உங்களது கருத்து என்ன?
வெற்றி மாறன்: இன்றைக்கு சினிமாவில் உள்ள தேடல், சினிமாவின் மாணவனாக இருப்பதற்கு சமூகத்தோடு எனக்கு இருக்கிற தேடலும், தொடர்பும் , சமூகத்தின் மீதான கோபமும், அவருடன் இருந்ததால் தான் இருக்கிறது. எனக்கு அடையாளம் இருக்கிறது என்றால் அவர் தான் காரணம்.
மதுக்கூர் ராமலிங்கம்: மதுரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வெற்றி மாறன்: மதுரை மக்கள் உரிமையாக அன்பு செலுத்துபவர்கள். சாப்பாட்டுக்கு முக்கியவத்துவம் அளிப்பது மதுரையின் ஸ்பெசல். ஆடுகளம் எடுக்க இரண்டரை ஆண்டுகள் இங்கு இருந்தேன் அதற்கு காரணம் இந்த ஊரின் தன்மைதான்.
மதுக்கூர் ராமலிங்கம்: நாவலை படமாக்கும் அனுபவம் எப்படி?
வெற்றி மாறன்: ஒரு நாவலை படமாக எடுக்க முதலில் செய்ய வேண்டியது, நாவல் ஈர்க்க வேண்டும். அந்த நாவலின் அடிப்படை சிந்தனை உன்னை முன் நகர்த்தினால், அந்த நாவல் சினிமாவாக எடுக்க தகுதியானது என பாலுமகேந்திரா சார் கூறுவார். பாலமகேந்திரன் சார் வேலை செய்வதை பார்த்தது தான் என் அனுபவம். வெட்கை நாவல் அசுரனாக வந்தபோது சிலருக்கு பிடிக்கவில்லை.
மதுக்கூர் ராமலிங்கம்: விடுதலை படம் பற்றி சொல்லுங்க?
வெற்றிமாறன்: விடுதலை படம் என்பது எனது 45 ஆண்டு வாழ்க்கையை விட நிறைய கத்துக்கொடுத்தது. நிறைய மனிதர்கள், தலைவர்களை பற்றி தெரிந்துகொண்டேன். விடுதலை படத்திற்கு முன்பு, மேடையை அலங்கரிக்கும் கவர்ச்சி பேச்சுகளை பேசும் தலைவர்கள் தான் என் கண்ணுக்கு தெரிந்தார்கள். மக்களோடு நின்று மக்களுக்கான விடுதலையை வென்றெடுத்த தலைவர்களை அப்போது தெரியவில்லை.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பிரச்சனை என்றால், கேள்வி கேட்கும் துணிச்சல் மிக்க தலைவர்கள் நம்பும் தத்துவம், அவர்களின் கொள்கை தான் காரணம். விடுதலை படத்திற்கு பிந்தைய 4 ஆண்டு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. சினிமா மாணவனாக இருந்தேன், இப்போது மார்க்சிஸ்ட் மாணவனாக உள்ளேன். எந்த ஒரு சமூக அமைப்பும் மார்க்சியம் இல்லை என்றால் அது மக்களுக்கு எதிராக நின்றுவிடும் என்பது தான் புரிதல். விடுதலை இரண்டாம் பாகத்தில் ரொம்ப பேசுறாங்கப்பானு சொன்னார்கள். இந்த மேடையில் நிற்பது மரியாதையாக நினைக்கிறேன். இந்த மாநாட்டில் ஒரு நிகழ்வில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது,’’
என்று அப்போது வெற்றி மாறன் பதில் அளித்தார்.
