'ஆபரேஷன் சிந்தூர்' பட அறிவிப்பு சர்ச்சை.. பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் உத்தம் மகேஸ்வரி!
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் படத்தை அறிவித்ததற்காக இயக்குநர் உத்தம் மகேஸ்வரி மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் சூழலில் ஆபரேஷன் சிந்தூர் படத்தை அறிவித்ததற்காக இயக்குநர் உத்தம் மகேஸ்வரி மன்னிப்பு கேட்டுள்ளார். இன்று சனிக்கிழமை காலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "புகழுக்காகவோ அல்லது பணத்துக்காகவோ இந்தப் படத்தை நான் இயக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறினார். மேலும், "நமது வீரர்களின் தைரியம், தியாகம் மற்றும் வலிமை" தன்னை நெகிழச் செய்ததாகவும் கூறினார்.
'ஆபரேஷன் சிந்தூர்' பட இயக்குநர் மன்னிப்பு
இந்தப் படத்தை அறிவிப்பதன் மூலம், "யாரையும் புண்படுத்தவோ அல்லது கோபப்படுத்தவோ நான் விரும்பவில்லை" என்று உத்தம் கூறினார். "சமீபத்தில் இந்திய ராணுவத்தின் வீரதீரச் செயல்களால் ஈர்க்கப்பட்டு ஆபரேஷன் சிந்தூர் படத்தை அறிவித்ததற்கு எனது மனமார்ந்த மன்னிப்பு. யாரையும் புண்படுத்தவோ அல்லது கோபப்படுத்தவோ நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஒரு திரைப்பட இயக்குநராக, நமது வீரர்களின் தைரியம், தியாகம் மற்றும் வலிமையால் நான் நெகிழ்ச்சியடைந்தேன், மேலும் இந்த வலிமையான கதையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர விரும்பினேன்."
இந்தப் படத்தை எடுக்க விரும்பியது ஏன்?
மேலும், "சிலருக்கு இந்தப் படத்தை அறிவித்த நேரம் சங்கடத்தையோ அல்லது வலியையோ ஏற்படுத்தியிருக்கலாம். இந்த படம் நமது நாட்டின் மீது ஆழ்ந்த மரியாதை மற்றும் அன்பினால் உருவானது, புகழுக்காகவோ அல்லது பணத்துக்காகவோ அல்ல. இருப்பினும், சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதற்காக, நான் மிகவும் வருந்துகிறேன் (கைகூப்பிய எமோஜி). இது வெறும் படம் மட்டுமல்ல, இது முழு நாட்டின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு மற்றும் உலகளவில் நாட்டின் சமூகத்தின் பிம்பம்," என்றும் அவர் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாலிவுட்டில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் படம் எடுக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்தப் பெயரில் படம் எடுக்க யாருக்கு உரிமை என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரைப் பார்த்த நெட்டிசன்கள் படக்குழுவினரை விமர்சித்தனர்.
போஸ்டரில் என்ன இருக்கிறது?
படத்தின் போஸ்டர் வித்தியாசமாக உள்ளது. ஏனெனில் பஹல்காம் தாக்குதலில், கொடூரமான பயங்கரவாதிகள் மனைவிகளின் கண்முன்னே கணவர்களைக் கொடூரமாகக் கொன்றனர். மத அடிப்படையில் இந்துக்களை மட்டும் குறிவைத்துச் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் மனைவிகளின் நெற்றியில் இருந்த சிந்தூரை அழித்தனர். இந்தக் கருப்பொருளிலேயே 'ஆபரேஷன் சிந்தூர்' படம் உருவாகிறது.
போஸ்டரில் ஒரு பெண் ராணுவ அதிகாரி ஒரு கையில் தனது நெற்றியில் சிந்தூர் இட்டுக்கொள்வது போலவும், மறு கையில் துப்பாக்கியைப் பிடித்தபடியும் உள்ளார். இந்தப் படம் தேசபக்தி மற்றும் பெண் சக்தியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. போஸ்டரில் டாங்கிகள், போர்க்களம், முள்வேலி மற்றும் பின்னணியில் வானில் பறக்கும் போர் விமானங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
