Kavin: 'கவினின் படத்தை இயக்குகிறாரா சுந்தர். சி?’ - இயக்குநர் தரப்பு விளக்கம்!
கவினின் படத்தை இயக்குகிறாரா சுந்தர். சி எனும் தகவல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கிய நிலையில், இயக்குநர் தரப்பு புது விளக்கத்தை அளித்துள்ளது.

இயக்குநர் சுந்தர்.சியின் அடுத்த படத்தில் நடிகர் கவின் நடிப்பதாக வெளியான தகவலை, இயக்குநர் தரப்பு முழுவதுமாக மறுத்துள்ளது.
விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை 2 சீரியல் மூலம் பிரபலமானவர், கவின். பின், அதே விஜய் டிவியில் தாயுமானவன், சரவணன் மீனாட்சி ஆகியத் தொடர்களிலும் நடித்து தமிழ் மக்களிடம் நன்கு பரீட்சயமானவர். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் - சீசன் 3யில் பங்கேற்பாளராக இருந்தார். அந்நிகழ்ச்சியின் மூலமும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். இந்நிலையில் பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன் ஆகியப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து இருந்தாலும், ’நட்புன்னா என்னானு தெரியுமா, லிஃப்ட், டாடா’ ஆகியப் படங்களில் ஹீரோவாக நடித்து நல்ல பெயரைப் பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக டாடாவில் இவர் நடித்தது அப்படத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தியது மட்டுமில்லாமல், வணிகரீதியாகவும் வெற்றியைப் பெற்றுத்தந்தது.
அதேபோல், இவரது நடிப்பில் வெளிவந்த வெப்சீரஸான ஆகாஷ் வாணி, நடிகர் கவினுக்கு நல்லபெயரைப் பெற்றுத் தந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு, தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை திருமணம் செய்துகொண்டார்.
பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ‘ஸ்டார்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் கலகலப்பு படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிகர் கவின் நடிப்பதாக செய்திகள் வட்டமடித்தன.
இந்நிலையில் இதுதொடர்பாக நாம் இயக்குநர் சுந்தர்.சி தரப்பிடம் கேட்டபோது, ‘இந்த தகவல் முற்றிலும் பொய்யானது’ எனத் தெரிவித்துள்ளனர். மேலும் சரியான தகவலைக் கேட்டு, உறுதிசெய்திவிட்டு செய்தியாக வெளியிடும்படி இயக்குநர் சுந்தர்.சியின் தரப்பு கோரிக்கை வைத்தது.
இதன்மூலம் கலகலப்பு மூன்றாம் பாகம் உறுதியாவது குறித்த சமிக்ஞைகள் உறுதிசெய்யப்பட்டாலும், அதில் இன்னார் தான் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதியாகவில்லை என்பது புலனாகிறது.
இது ஒருபுறமிருக்க, கவினின் ஐந்தாவது படத்தை சதீஷ் என்பவர் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். அப்படத்துக்கு கிஸ் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து கவின், நெல்சனின் உதவி இயக்குநர் சிவபாலனின் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனின் உதவி இயக்குநர் விக்ரனன் அசோக்குடன் ஒரு படம்,
மாரிசெல்வராஜின் இயக்கத்தில் ஒரு படம் என கதையை மட்டும் கேட்டு உறுதிசெய்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எது எப்படியோ, வெகுநாட்களாக புதுமுக நடிகர்களின் வரவு கோடம்பாக்கத்துக்கு இல்லாமல் இருந்த நிலையில், புதுமுக நடிகர் கவின், இன்னும் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய ஹீரோவாக வலம்வருவார் எனத் தெரிகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்