Director Shankar: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயோபிக்.. கில்லி, தூள் போல் பரபரப்பான மாஸ் கதை! ஷங்கர் சொன்ன விஷயம்
Director Shankar: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையை பயோபிக்காக உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர், கேம் சேஞ்சர் படம் உருவானதன் பின்னணி குறித்து விரிவாக பேசியுள்ளார்.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக இயக்கியிருக்கும் தெலுங்கு படமான கேம் சேஞ்சர் சங்ராந்தி ஸ்பெஷலாக ஜனவரி 10ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இயக்குநர் ஷங்கர் சினிமா விகடன் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, இயக்குநர் ஷங்கரிடம் பயோபிக் படம் இயக்கினால் யாருடைய கதையை படமாக எடுப்பீர்கள் என கேட்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பார்த்திராத நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையை படமாக்க விருபுவதாக தெரிவித்தார்.
ரஜினிகாந்த் பயோபிக்
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் கூறியதாவது, "நான் பயோபிக் எடுக்க விரும்பினால் ரஜினிகாந்த் கதையை படமாக்க விரும்புகிறேன். அவர் மிக பெரிய மனிதர். எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர். இதுவரைக்கும் பயோபிக் பற்றி எதுவும் எனக்கு தோன்றவில்லை, நீங்கள் கேட்டவுடன் ரஜினி தான் என் நினைவுக்கு வந்தார். நானே இப்படி சொல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை" என்றார். ஷங்கரின் இந்த கருத்து ரஜினி ரசிகர்களை குஷியடைய செய்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் உருவான கேம் சேஞ்சர்
கொரோனா காலகட்டத்தில் இயக்குநர்கள் அனைவரும் ஜூம் மீட்டிங்கில் பேசிக் கொண்டிருப்போம், அப்போது கார்த்திக் சுப்புராஜ் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவர் நான் ஒரு கதை, உங்கள் படங்களின் கதையின் இன்ஸ்பிரேஷனில் எழுதினது’ என்று சொன்னார்.
எனது கதையின் இன்ஸ்பிரேஷன் என்று அவர் சொன்னதாலே ஏதாவது என்னை சிங்க் செய்யும் விஷயம் இருக்கும் என்று நினைத்தேன். அப்படி தான் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதையை ரெக்கார்ட் செய்து, அதில் எனது ஸ்டைலில் கொஞ்சம் மாற்றங்களும், ஏராளமான விஷயங்களும் சேர்த்து ஸ்கிரீன் பிளேவாக்கி கேம் சேஞ்சரை உருவாக்கினேன். தற்போது அந்த படம் திரைக்கு வரப்போகிறது.
எனக்கு தமிழில் கில்லி, தூள், தில் போன்ற படங்களும், தெலுங்கில் ஒக்கடு, போக்கிரி படங்களும் பிடிக்கும். பரபரவென செல்லும் விதமாக அந்த படங்கள் இருக்கும். நானும் அந்த மாதிரி ஒரு திரைப்படம் பண்ணலாம் என்று ஒரு ஐடியா இருந்தது. கேம் சேஞ்சர் அதற்கு மேட்ச் ஆனது. பரபரப்பான நல்ல மாஸ் மசாலா படமாக இருக்கும்.
தில்ராஜு ரொம்ப நாளாவே நம்முடன் படம் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்தார் அவரும் இதில் இணைந்தார். ராம்சரண் உள்ளே வந்தார்.
வேள்பாரிக்கான திரைக்கதை
கொரோனா நேரத்தில் இந்தியன் 2, இந்தியன் 3 ஆகிய கதைகளோடு வேள்பாரி கதை பிடித்து போய் அதற்கும் திரைக்கதை அமைத்தேன். அந்த காலகட்டத்தில் வேள்பாரி எழுதிய சு. வெங்கடேசனுடன் பழகும் போது, "நீங்கள் சரித்திர கதைகள் மட்டும் தான் எழுதுவீங்களா? திரைப்படத்தில் பணியாற்றினால் வழக்கமான சமூக தீம் கதைகள் எழுதுவீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், "தாரளமா, எல்லா கதைகளும் செய்யலாம் சார்" என்று சொன்னார்.
வேள்பாரிக்கான கதை விவாதங்களில் அவர் கலந்து கொண்டது நல்ல விஷயமாக இருந்தது. இந்த கதை வேற ஒரு ஷேப் எடுத்ததற்கு அவருடைய பங்களிப்பு முக்கியமான விஷயமாக இருந்தது. எல்லாமே சரியாக திங்க்ஸ் ஃபாலின் பிளேஸ் என்று சொல்வார்கள் இல்லையா அதுபோல அமைந்தது" என்றார்.
கேம் சேஞ்சர் திரைப்படம்
அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண், தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, அஞ்சலி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், ஜெயராம், நாசர், சமுத்திரகனி உள்பட பலரும் நடித்துள்ளார்கள். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத திரைக்கதை, வசனம் எழுதி ஷங்கர் இயக்கியுள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸாக வரும் முதல் படமாக கேம் சேஞ்சர் உள்ளது.
தொடர்புடையை செய்திகள்