எதுவும் கைகூடவில்லை.. இது எல்லாம் ஃபயர்.. கேம் சேஞ்சர் பட விழாவில் ஷங்கர் பேச்சு
தெலுங்கு சினிமாவில் படம் பண்ண வேண்டும் என பலமுறை முயற்சித்தும் அது கைகூடாமல் போனதாக இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இந்தப் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார்.
ராம் சரண் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தில் ராஜ் மற்றும் ஷிரிஷ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சாதனை செய்ய உள்ள ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் நேரடி தெலுங்கு படமாக இயக்கியதன் மூலம் டோலிவுட் சினிமாவில் தன் முதல் காலடி தடத்தை பதித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர், அவர் படங்களில் பல சாதனைகள் செய்யப்படும் என்பது தவிர்க்க முடியாது. அதை தனது தெலுங்கு சினிமாவிலேயே செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
அதாவது, கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை இயக்குநர் ஷங்கர் அமெரிக்காவில் நடத்த திட்டமிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இது இந்திய வரலாற்றில் தெலுங்கு சினிமா செய்யும் சாதனை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முன் எந்த தெலுங்கு படமும் அமெகரிக்காவில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியது இல்லை.
கேம் சேஞ்சர் படம்
கடந்த 2021இல் அறிவிக்கப்பட்டு தொடங்கிய இந்த படம் பல்வேறு தாமதத்துக்கு பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது. அரசியல் ஆக்ஷன் திர்ல்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார்.
படத்திலிருந்து ஏற்கனவே ஜருகண்டி, ரா மச்சா என இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒரு பாடல் வெளியாகியுள்ளது. கேம் சேஞ்சர் திரைப்படம் ஹைதராபாத், மும்பை, சண்டிகர், ஆந்திர பிரதேசம், நியூசிலாந்து உள்பட பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு பெரிய பட்ஜெட்
மேலும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் பேசுகையில் "ஷங்கர் தெலுங்கு படம் பண்ண விரும்புவதாக சக இயக்குநர்கள் மூலம் அறிந்தேன். ராம் சரண் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பில் இருந்தார். பின்னர் அவரிடம் கதையைச் சொன்ன பிறகு அவரை வைத்தே படத்தை ஆரம்பித்தோம். இது எங்கள் பேனரில் உருவாகும் 50-வது படம்.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் நான் படம் எடுத்ததே இல்லை. உலகச் சூப்பர் ஸ்டார் ராம் சரணால் தான் இந்தப் படம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. இந்த முறை சாதாரணமாக அடிக்கப் போவதில்லை. கடுமையாக அடிப்போம். இரு மாநிலங்களிலும் நடக்கும் பல அரசியல் பிரச்சினைகள் இந்தப் படத்திற்காக வரும் என்றார்.
எதுவும் கைகூடவில்லை
இயக்குநர் ஷங்கர் பேசுகையில், "போக்கிரி மற்றும் ஒக்கடு போன்ற மாஸ் மசாலா பொழுதுபோக்கு படங்களை எடுக்க விரும்பினேன். ஆனால் அதிலும் என் முத்திரை இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அத்தகைய படம் தான் கேம் சேஞ்சர். தெலுங்கில் சிரஞ்சீவி. மகேஷ்பாபு, பிரபாஸை வைத்து படம் பண்ண முயற்சித்தேன். அது கைகூடவில்லை.
ராம் சரணுடன் ஒரு படம் பண்ண விரும்புகிறேன் என்று பலரும் கூறினார்கள். அதனால்தான் இந்த கேம் சேஞ்சர் படம் உருவானது. ஒரு அரசு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் மோதலையும் போரையும் மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ராம் சரண் கல்லூரி மாணவராக நடிக்கும் தோற்றத்தில் நிறைய ஃபயரான காட்சிகள் உள்ளது" என்றார்.