‘நான் அப்படி சொல்லவே இல்ல..10 நிமிஷம் கூட பொறுமையா இருக்க மாட்றாங்க.. உடனே கமெண்ட் வந்துருது..’- ஷங்கர் பதிலடி
தற்போதைய தலைமுறை பொறுமையற்றவர்களாக இருக்கிறார்கள்; 10 நிமிடத்தில் செல்போனை எடுத்து படத்தை பற்றி சமூக வலைதளங்களில் கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்; 10 நிமிடத்தில் அவர்களது கவனம் சிதறிவிடுகிறது. - ஷங்கர்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸை மனதில் வைத்து கேம் சேஞ்சர் படத்தை எடுத்திருப்பதாக ஷங்கர் கூறியதாக வெளிவந்த கருத்திற்கு, பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் எதிர்வினையாற்றி இருந்த நிலையில், தற்போது ஷங்கர் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நேர்மையான இடத்திலிருந்து...
சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய ஷங்கர், ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை; படத்தில் நாம் சொல்ல வரும் விஷயங்களை விரைவாகவும், அதே நேரம் திறம்படவும் சொல்ல வேண்டும். நாம் அவ்வாறு செய்யத் தவறும்போது, பார்வையாளர்களின் கவனம் திசை திரும்ப நாம் இடம் கொடுக்கிறோம்;
படம் முழுக்க சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். எடிட்டர் ரூபன் அதை கேம் சேஞ்சரில் கொண்டு வந்திருக்கிறார். அதைத்தான் நான் சொல்ல வந்தேன். அனுராக் இப்படி சொன்னது எனக்கு தெரியாது; இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது; ஏனென்றால் அது நேர்மையான இடத்திலிருந்து வந்திருக்கிறது’ என்றார்.
பொறுமையற்றவர்களாக இருக்கிறார்கள்
மேலும் பேசிய அவர் ‘தற்போதைய தலைமுறை பொறுமையற்றவர்களாக இருக்கிறார்கள்; 10 நிமிடத்தில் செல்போனை எடுத்து படத்தை பற்றி சமூக வலைதளங்களில் கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்; 10 நிமிடத்தில் அவர்களது கவனம் சிதறிவிடுகிறது.
எனவே படத்தின் எடிட்டிங் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். கேம் சேஞ்சரைப் பார்க்கும்போது, இது ஒரு விறுவிறுப்பான படம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்; இது உங்களை இங்கேயும், அங்கேயும் திரும்ப அனுமதிக்காது. அவ்வளவு நேர்த்தியாக ரூபன் படத்தை எடிட் செய்திருக்கிறார்" என்று பேசினார்.
அனுராக் என்ன சொன்னார்
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ‘ரசிகர்களின் கவனம் மிகவும் குறுகியிருப்பதாகவும், அதை மனதில் வைத்து இன்ஸ்டா ரீல்ஸ் போன்று தனது கேம் சேஞ்சர் படத்தை உருவாக்கி இருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். அவரது படத்தை பார்த்த பிறகுதான் அவர் சொன்ன விஷயம் என்னவென்று புரியும்.
இயக்குநர்கள் சமையல் கலைஞர்கள் இல்லை
பல இயக்குநர்கள் இதுபோன்ற கருத்துகளை முன் வைக்கிறார்கள். எனது படம் ரீல்ஸ் போன்று இருக்கும். அதுபோல்தான் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என சொல்கிறார்கள். ஒரு விஷயத்தை உருவாக்கி பரிமாறுவதற்கு இயக்குநர்கள் சமையல் கலைஞர்கள் இல்லை. ரசிகர்கள் என்ன விரும்பி பார்க்கிறார்கள் என் ஒருவர் சிந்தித்து விட்டால் அங்கு சரிவு ஏற்படுகிறது. ரசிகர்கள் ஒன்றும் உயிரினம் அல்ல.
அவர்கள் ஒரு பெரிய கடல். எல்லாவற்றுக்கும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய வேண்டியதாகும். . ட்ரெண்ட் என்பதை மனதில் வைப்பதை காட்டிலும், ஒவ்வொரு சினிமாக்களும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையுடனும் உருவாக்கப்பட வேண்டும்’ என்றார்.
ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள படம் கேம் சேஞ்சர். இப்படம் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்