‘பான் இந்தியா படத்தால மக்களோட ரசன செத்து போச்சு.. 100 கோடிக்கு ஆசப்பட்டு படம் எடுக்குறாங்க’- செல்வராகவன் வேதனை
பான் இந்தியா சினிமா ரசிகர்களின் மூளையை மாற்றியதாகவும் அதனால் அவர்களின் ரசனை செத்து போய் விட்டதாகவும் இயக்குநர் செல்வராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், சினிமாவில் பான் இந்தியா கலாச்சாரத்தால் நல்ல படங்களின் வருகையும், மக்களின் ரசனையும் செத்தே போய்விட்டதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கோபிநாத்திற்கு அளித்த பேட்டியில் இதுபற்றி தன் கருத்துகளை வெளிப்படுத்தி இருப்பார்.
வாழ்க்கையே முடிஞ்சு போயிடுது
இந்த காலத்துல ஒரு இயக்குநரா என் படத்த நான் ஒரு கோணத்துல எடுத்திருப்பேன். அதை அப்படியே ஒரு நொடில கொதறி போட்டுட்டு போயிட்டே இருக்காங்க. அந்த படம் பத்தி நான் வாட்ஸ் அப்ல பேசிட்டு இருக்கும் போதே, என் வாழ்க்கையே முடிஞ்சு போயிடுது. ஒரு 5 நிமிஷம் டைம் எடுத்து அவன் என்ன சொல்ல வர்றான்னு காது கொடுத்து கூட கேக்க யாருக்கும் நேரம் இல்ல.
நல்ல படம் எடுக்க ஆள் இல்ல
இப்ப இருக்க எல்லாமே கமர்ஷியல் படம் தான். ஒரு குத்து பாட்டு இருக்கணும், ஒரு சண்ட இருக்கணும். இப்படி இருந்தா ஒரு சினிமா எடுக்குறதுக்கான தகுதி எல்லாம் எங்க இருக்கும். எல்லாம் போயுடுச்சு. நாம கடைசியா ஒரு நல்ல படம் பாத்து எத்தன நாள் ஆகுதுன்னே தெரியல. இப்போ எல்லோமே முடிஞ்சு போயிடுச்சு. ஒரு படத்த குத்தி குத்தி கிளிச்சிடுறாங்க. ஒருத்தன் நல்ல படம் எடுக்க அவனே கஷ்டப்பட்டு வந்தாலும் எடுக்க ஆள் இல்ல.
படம் ஓடினா போதும்
பான் இந்தியா என்கிற அசிங்கமான கல்சர் இப்போ வந்திருக்கு. கிழக்குச் சீமையிலே, மூன்றாம் பிறை மாதிரி படங்களெல்லாம் வந்து எவ்வளவு நாட்கள் ஆகுது. இப்போதைக்கு படம் மக்கள் கிட்ட போய் சேர்ந்தா போதும் படம் ஓடினா போதும், காசு வந்தா போதும்னு தான் இருக்காங்க. அதுவும் தப்பில்ல. எல்லாருமே காசுக்காக தான் படம் பண்ணுறோம். ஆனால் அதுமட்டும் தான் படம் என்கிற நிலைமை வந்திடுச்சு. ரியல் சினிமா வர்றது எல்லாம் ரொம்ப கஷ்டம். ஆயிரத்தில ஒரு படம் எல்லா பிரச்சனையும் தான்டி உருண்டு பெறண்டு வந்தாலும் அதையும் மக்கள் பார்த்திடுறாங்க.
ஆயிரம் கோடி வசூல் ஆசை
எனக்கென்னமோ இது கோவிட் வந்து பண்ண மாற்றமா தான் எனக்கு தெரியுது. இப்போ தமிழ் சினிமான்னு இல்ல, எல்லாருமே ஆயிரம் கோடி படத்துக்கு வசூல் வரணும்ன்னு சொல்லி தான் படம் எடுக்குறாங்க. அது கலெக்ட் ஆகுதா இல்லையாங்குறது வேற விஷயம். படம் ரிலீஸ் ஆன 5வது நாள் ஆயிரம் கோடினு போட்டுடனும். இங்க பெரும்பாலானவங்க ஹீரோவை சந்தோஷப்படுத்ததான் படமே எடுக்குறாங்க. அவர்கள சந்தோஷப்படுத்தினா தான் அடுத்த படம் தருவாருன்னு.
சினிமா செத்தே போச்சு
அதுவும் இல்லமா இதுவும் இல்லாமன்னு ஒரு நல்ல சினிமா செத்தே போச்சு. இனிமே ஒரு நல்ல சினிமாவ எடுக்குறன்னு சொல்லி பாராதிராஜா மாதிரியான ஆட்கள் எல்லாம் ஒரே படத்துல சர்வைவ் ஆக முடியாது. சின்னசின்ன நல்ல படங்களை மக்கள் கொண்டாடினாலும் அதற்கான விகிதம் ரொம்ப கம்மி. அதுலயும் ஒரு டைரக்டரால காம்ப்ரமைஸ் இல்லாம படம் பண்ண முடியல.
மூளை என்னமோ ஆகிடுச்சு
மக்களுக்கு கோவிட் டைம்ல 2 வருஷமா வீட்டுக்குள்ளேயே இருந்து அவர்களுக்கு மூளை என்னமோ ஆகிடுச்சு. இதை நான் கிண்டலுக்காக சொல்லல. 2 வருஷம் வீட்டுக்குள்ள போட்டு அடைச்சா எல்லாரும் இப்படி தான் ஆவாங்க. இந்த எல்லா விஷயமும் உடைஞ்சு ஒரு நல்ல படம் என்னோடோ ஆயுள்காலத்துல வராது. இது என்னோட கோவம் இல்ல ஆதங்கம்.
பான் இந்தியா படத்துல உடன்பாடு இல்ல
பான் இந்தியா படங்கள் மீது எனக்கு உடன்பாடு இல்ல. ஒரு படம் தமிழ்லையும் கிளிக் ஆகணும், தெலுங்குலையும் கிளிக் ஆகணும், மலையாளத்திலும் கிளிக் ஆகணும் என விரும்பினா இப்படி தான் வரும். பான் இந்தியா படம்ன்னா என்ன அதிகபட்சம் ஹிந்தி சினிமாவ ரீச் பண்ணும். எல்லா பான் இந்தியா படத்திலும் 3, 4 பாட்டு தெறிக்கும். அதுல முக்கால்வாசி ஹீரோயினே டான்ஸ் ஆடிடுவாங்க. அந்த மாதிரி படங்கள்ல கலை இருக்குற மாதிரி எனக்கு தெரியல.
ரசனை செத்துருச்சு
ஹிந்தியில இப்போ அவங்க படத்தையே மறந்துட்டாங்க. அவங்களும் இங்க இருக்க படத்த தான் பாக்குறாங்க. ஹிந்தியில இருக்க டாப் டைரக்டர்ஸ் எல்லாம் இங்கிருந்து போனவங்க தான். இதுனால ரசனை வந்து சென்ட்ரலைஸ்டு ஆகல. ரசனையே செத்து போச்சு. இந்த மாற்றம் நமக்கு மட்டுமல்ல ஹாலிவுட்லயும் நடந்தது. மார்வெல், டிசின்னு வந்து உலகத்த காப்பாத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதுனால படத்தோட ஆயுளே போச்சு" என அவரது ஆதங்கத்தை தெரிவித்திருப்பார்.
