Pa. Ranjith: யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்று! பா. ரஞ்சித் காட்டம்
Director Pa. Ranjith: யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார். அத்துடன் இந்த விஷயத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார்

கடந்த 2022இல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழிக மக்களை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்களை குற்றவாளிகளாக அறிவித்திருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் சினிமா இயக்குநர் பா. ரஞ்சித், சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரகை தொடர்பாக தனது எதிர்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? தமிழக அரசே வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்று அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திடுக!!
திட்டமிட்டு செய்யப்படும் செயல்
வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அந்த மூன்று பேரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டு செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசர கதியில் ஏதோ ஒரு காரணத்துக்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
குற்றவாளிகளை காப்பாற்ற சூழ்ச்சி
சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர், சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம்.
வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கை கடுமையாக கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காண தெரியாத சி.பி.சி.ஐ.டி இப்போது திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை.
இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்கு திடீரென்று விழித்திருப்பதை பார்க்கையில், இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது. உண்மை குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியை செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. உண்மை குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்."
இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பா. ரஞ்சித் படங்கள்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கித்தில் விக்ரம் நடித்து தங்கலான் படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சறுக்கியது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சார்பட்டா 2 திரைக்கதை எழுதி முடித்துவிட்டதாக கூறிய ரஞ்சித், அந்த படத்தின் பணிகளில் பிஸியாக உள்ளது.
அத்துடன் பா. ரஞ்சித் தயாரிப்பால் பாட்டில் ராதா என்ற படம் ஜனவரி 24 (நேற்று) ரிலீசாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்