Dadasaheb Phalke: இந்திய திரையுலகின் தந்தை தாதாசாகிப் பால்கே பிறந்தநாள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dadasaheb Phalke: இந்திய திரையுலகின் தந்தை தாதாசாகிப் பால்கே பிறந்தநாள்!

Dadasaheb Phalke: இந்திய திரையுலகின் தந்தை தாதாசாகிப் பால்கே பிறந்தநாள்!

Karthikeyan S HT Tamil
Published Apr 30, 2024 05:48 AM IST

Dadasaheb Phalke Birth Anniversary: 'இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படும் தாதாசாகிப் பால்கேவின் 154 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அவரது சிறப்புக்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

தாதாசாகிப் பால்கே
தாதாசாகிப் பால்கே

1910 முதல் 1940 வரை ஏராளமான திரைப்படங்களை தன் சொந்த செலவில் தயாரித்து இயக்கவும் செய்தார். இவர் இயக்கிய முதல் படத்தின் பெயர் ‘அரிச்சந்திரா’. இந்திய மக்களுக்கு முதன்முதலில் சினிமாவை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். சினிமாவை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் என்பதால் தாதாசாகிப் பால்கே 'இந்திய சினிமாவின் தந்தை' என்ற புகழைப் பெற்றார்.

பிறப்பு

1870 ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ல் பம்பாய் மகாணத்தின் நாசிக் என்னுமிடத்தில் பிறந்தார். தாதா சாகேப் பால்கேவின் இயற்பெயர் இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே. ஓவியம், அச்சுக்கலை, ஒளிப்படம், மேஜிக் எனப் பல கலைகளில் அதீத ஆர்வம் கொண்டிருந்த பால்கே மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.

சினிமா ஆர்வம்

சினிமா மீது தான் கொண்ட ஆர்வத்தால் முழுநீளத் திரைப்படம் எடுப்பதற்கான முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் தொடங்கியிருந்தார் பால்கே. 1910 ஆம் ஆண்டில் பால்கே பார்த்த 'தி லைஃப் ஆஃப் கிறைஸ்ட்' என்ற பிரெஞ்சுத் திரைப்படம் சினிமா மீதான அவரது தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது. அதே பாணியில் கிருஷ்ணரைப் பற்றி ஒரு திரைப்படத்தை எடுக்க பால்கே முடிவு செய்து திரைப்படத் தொழிலில் முழு கவனம் செலுத்தினார்.

இந்தியாவின் முதல் திரைப்படம்

தாதாசாகிப் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ‘ராஜா ஹரிச்சந்திரா’. அந்தப் படத்தின் நாயகியாக அக்கால வழக்கத்தின்படி ஆண் நடிகர் ஒருவரே நடித்தார். 1913இல் மௌனப்படமாக வெளியான ‘ராஜா ஹரிச்சந்திரா’ பெரும் வெற்றியடைந்தது. இதுவே இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமாகக் கருதப்படுகிறது. அதே ஆண்டில் 'மோகினி பஸ்மாசுர்' படத்தின் மூலம் நாட்டின் முதல் நடிகைகளாக, தாய்-மகளான கமலா பாய் கோகலே, துர்காபாய் காமத் ஆகியோரை பால்கே அறிமுகப்படுத்தினார். 

ஒரே பேசும்படம்

பின்னர் கிருஷ்ணன் கதையை 1918-ல் ‘கிருஷ்ண ஜென்மாட’ என்கிற தலைப்பில் திரைப்படமாக எடுத்தார். 'லங்கா தகன்' படத்தில் ராமன், சீதை என இரண்டு வேடங்களில் ஒரே ஆணை நடிக்கவைத்து முதல் இரட்டை வேடச் சாதனைக்கும் காரணமானார். 1910 முதல் 1940 வரை ஏராளமான திரைப்படங்களை தன் சொந்த செலவில் தயாரித்து இயக்கவும் செய்தார். 1937 ஆம் ஆண்டு வெளியான ‘கங்காவர்த்தன்’, பால்கே இயக்கிய கடைசித் திரைப்படம். அதுவே அவருடைய ஒரே பேசும் படம்.

தாதாசாகிப் பால்கே விருது

இவர் தனது 73-வது வயதில் 1944-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி இயற்கை எய்தினார். இவரை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் இயக்குநர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. 'இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படும் தாதாசாகிப் பால்கேவின் 154 ஆவது பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 30) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அவரை நினைவு கூர்வோம்..!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.