‘அவர் வந்தா வீட்டுக்கதவை திறக்க மாட்டேன்.. இவ்வளவு மோசமாவா நடிக்கிறது’ - தேவ தர்ஷினி!
படம் முடிந்த பின்னர் என்னால் பேசவே முடியவில்லை. காரணம், படத்தின் முடிவு அப்படி இருந்தது. - சேத்தன் மனைவி
சென்னையில், விடுதலை பாகம் 2 படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த சேத்தனும், அவரது மனைவி தேவ தர்ஷினியும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அவர்களிடம் சேத்தன் மனைவி தேவ தர்ஷினி பேசும் போது, 'படம் மிகவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. நானும், என்னுடைய மகளும் என் கணவர் அருகிலேயே உட்கார வில்லை. படத்தில் அந்தளவு மோசமானவராக அவரை காண்பித்து இருக்கிறார்கள். எத்தனையோ வில்லன் ரோல்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இதில் சேத்தன் மிகவும் கொடூரமாக நடித்து இருக்கிறார்.
முடிவு அப்படி இருந்தது.
படம் முடிந்த பின்னர் என்னால் பேசவே முடியவில்லை. காரணம், படத்தின் முடிவு அப்படி இருந்தது.
என் கணவர் வீட்டிற்கு வந்தால் கதவையே திறக்க மாட்டேன். ஒவ்வொருவரும் இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு விஷயத்தை எடுத்துச் செல்வார்கள். அது தனி நபர் சார்ந்த விஷயமாக இருக்கும். இளையராஜா சார் தெய்வம். அவரைப் பற்றி நான் என்ன சொல்ல' என்று பேசினார்.
சேத்தன் பேசும் போது, ' மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லா இடங்களிலும், மக்கள் ஆவலுடன் படத்தை வந்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள். முதல் பாகத்திலும் நான் நடித்து இருந்தேன். அதை விட இரண்டாம் பாகத்தில் என்னுடைய கதாபாத்திரம் இன்னும் நன்றாக வந்து இருக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் வெற்றி மாறனின் எழுத்தும், டைரக்ஷனும் தான். வெற்றிமாறன் என்றுமே ஏமாற்ற மாட்டார். இதிலும் அவர் ஏமாற்றவில்லை ' என்று பேசினார்.
விடுதலை 2 படம் எப்படி இருக்கிறது?
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி,விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ், சேத்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இன்று வெளியான திரைப்படம் விடுதலை பாகம் இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கதையின் கரு என்ன?
முதல் பாகத்தில் போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையே நடந்த மோதல், வாத்தியாரின் கைது, அதிகாரிகளின் அதிகார வர்க்கம் மக்களுக்கு எதிராக நடத்திய வெறியாட்டம் உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்த வெற்றிமாறன், இந்த பாகத்தில் மக்கள் படை உருவான கதை, வாத்தியார் கம்யூனிசம் பாதையை தேர்ந்தெடுத்தற்கான காரணம், போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையேயான போரில் ஜெயித்தது யார்? குமரேசனின் குற்ற உணர்வு அவனை என்ன செய்தது உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்திருக்கிறார்.
கடந்த பாகம் முழுக்க முழுக்க குமரேசன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சூரியை சுற்றி இருந்த நிலையில், இந்த பாகம் முழுக்க, முழுக்க வாத்தியார் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விஜய் சேதுபதியை சுற்றி அமைந்திருக்கிறது.
படம் முழுக்க வாத்தியாராக விரவி கிடக்கிறார் விஜய் சேதுபதி. வெற்றிமாறன் வழியே வாத்தியாராக அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் சமுதாயத்திற்கான பாடம். வாத்தியாரின் வாழ்கையில், வெவ்வேறு பருவங்களில் அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடித்திருப்பது சிறப்பு. குறிப்பாக வயதான தோற்றத்தில் அவர் வெளிப்படுத்தும் மேனரிசங்கள் அல்டிமேட்.
அவரது மனைவியாக மஞ்சு வாரியர். தைரியமும், தெளிவும் நிறைந்த பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மஞ்சு வாரியருக்கும், விஜய் சேதுபதிக்கான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. டி கம்பெனியின் ஓசியாக வரும் சேத்தன் காமெடி, வில்லனிசம் என இரண்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ராஜீவ் மேனன் நடிப்பு புருவம் விரியவைக்கிறது. வாத்தியாரின், வாத்தியாராக வரும் கிஷோரின் நிதானம் கம்யூனிசம் கொள்கைகளை கனகச்சிதமாக உணரவைக்கிறது. சூரி பெரிதாக தெரியவில்லை. கென் கருணாஸின் ஆக்ஷன் அதகளம்.
வெற்றிமாறனின் அரசியல்
வாத்தியார் கதாபாத்திரத்தை உருவாக்கிய வெற்றிமாறன், வாத்தியார் தேர்ந்தெடுத்த கம்யூனிச பாதையில், பண்ணையார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய வன்முறை, அவர்களுக்கு எதிராக மக்கள் வன்முறையை கையில் எடுத்ததால் நடந்த விபரீதங்கள், உயர் சாதி பெண்களை தாழ்த்தப்பட்ட ஆண்கள் காதலிப்பதற்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில், கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும்? அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அலட்சியமாக நடத்தும் கொலைகள் சரியானதா? அதிகார வர்க்கத்துக்கு ஜாதிய ஏற்றத்தாழ்வு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது? ஒற்றுமையின் பலம் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை திரைக்கதையாக வடித்து கொடுத்து இருக்கிறார்.
காட்சிகள் சுவாரசியமாக, விறுவிறுப்பாக சென்றாலும், கம்யூனிசம் பாதையில் இடம்பெற்ற அதிகபட்ச வசனங்கள் கொட்டாவியை வரவழைக்கின்றன. இளையராஜா இன்னும் தரமான பின்னணி இசையை கொடுத்திருக்க வேண்டும். வழக்கம் போல வெற்றி மாறன் படத்தில் இடம்பெறும் டப்பிங் பிரச்சினை இந்த படத்திலும் இருக்கிறது.
டாபிக்ஸ்